This Article is From Aug 21, 2020

விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி: உயர்நீதிமன்றம்

தனிநபராக சிலைகளை எடுத்து சென்று அருகில் உள்ள நீர்நிலைகளிலோ கரைக்கலாம்.

விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி: உயர்நீதிமன்றம்

விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி: உயர்நீதிமன்றம்

விநாயகர் சிலைகளை அமைப்பாகவோ, குழுவாகவோ அல்லாமல் தனி நபராக நீர்நிலைகளில் சென்று கரைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்திக்கு விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பொது இடங்களில்‌ விநாயகர்‌ சிலைகளை நிறுவுவதையோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதையோ, விநாயகர்‌ சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்‌ செல்வதையோ, அச்சிலைகளை நீர் நிலைகளில்‌ கரைப்பதையோ அனுமதிக்க இயலாது என்று தெரிவித்தது. 

அதனால், பொது மக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதூர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக, இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும், தடையை மீறி விநாயகர் சிலை நிறுவப்படும் என்றும் இந்து அமைப்புகள் தெரிவித்து வந்தன. 

இதனிடையே, விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், விநாயகர் சதுர்த்தி ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களின் உணர்வுபூர்வமான விஷயமாக இருக்கிறது. அரசு இந்த விவகாரத்தில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா? என நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதலளித்த அரசு தரப்பு, பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் செல்ல எந்த தடையும் விதிக்கவில்லை. வழிபாடு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்பது அரசின் எண்ணம்மல்ல என்று தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, தனிநபர்கள் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை, அருகில் உள்ள கோயில்களுக்கு வெளியேவோ, அல்லது தனிநபராக சிலைகளை எடுத்து சென்று அருகில் உள்ள நீர்நிலைகளிலோ கரைக்கலாம். சென்னையில் மெரினா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எனினும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் விதித்த தடையை தளர்த்த இயலாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இவை அனைத்தும் அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குள் அடங்கும். மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

.