தமிழகத்தில் 20 சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரக்கூடும் என்கிற நிலையில், அதனை எதிர்கொள்வதற்காக ஆளும் அதிமுக தயாராகி வருகிறது.
இதையொட்டி 20 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் அதிமுக நிர்வாகிகள் இறங்கியுள்ளனர். முன்னதாக டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருந்தார்.
இந்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தொகுதிகள் உள்பட மொத்தம் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற உழைக்க வேண்டும் என தொண்டர்களை வலியுறுத்தினர்.