This Article is From Jan 21, 2020

சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்! நேபாளத்தில் வாயு கசிவில் சிக்கி கேரள மாநிலத்தவர் 8 பேர் பலி!

மயக்கம் அடைந்திருந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஹாம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.செல்லும் வழியில் அவர்கள் உயிரிழந்து விட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி சுஷில் சிங் ரத்தோர் கூறியுள்ளார்.

சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்! நேபாளத்தில் வாயு கசிவில் சிக்கி கேரள மாநிலத்தவர் 8 பேர் பலி!

உயிரிழந்த குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Kathmandu:

நேபாளத்தில் சுற்றுலா சென்ற கேரள மாநிலத்தை சேர்ந்த 8 பேர், அறையில் ஹீட்டரில் ஏற்பட்ட வாயுக்கசிவில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்களை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

உயிரிழந்தவர்களில் 4 பேர் சிறுவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். கடுங்குளிர் காரணமாக ஹீட்டர் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வாயுக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக மயக்கம் அடைந்திருந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஹாம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்து விட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி சுஷில் சிங் ரத்தோர் கூறியுள்ளார்.

இதுகுறித்து காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,'மயக்கம் அடைந்திருந்த 8 பேரும் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்து விட்டனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள நாட்டில் கேரள சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் பிரவீன் கிருஷ்ணன் நாயர், சரண்யா சசி, ஸ்ரீபத்ரா பிரவீன், ஆர்ச்சா பிரவீன், அபினவ் சரன்யா நாயர், ரஞ்சித் குமார் அதாதோலத் புனாதில், இந்து லட்சுமி பீதாம்பரன் ரகலதா மற்றும் வைஷ்ணவ் ரஞ்சித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மொத்தம் 15 மலையாளிகள் நேபாளத்தின் பொகாராவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இது அந்நாட்டின் முக்கியமான சுற்றுலாப் பகுதியாகும். சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு, திரும்பும் வழியில் எவரெஸ்ட் பனோரமா ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.

ரிசார்ட் மேனேஜர் அளித்த தகவலின்படி, குளிர் அதிகம் இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் அறையில் இருந்த ஹீட்டரை பயன்படுத்தியுள்ளனர். அப்போது வாயுக் கசிவு ஏற்பட்டு மயக்கம் உண்டாகியுள்ளது. 

15 பேரும் மொத்தம் 4 அறைகளை எடுத்துள்ளனர். அவர்களில் 8 பேர் ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும், உள்புறமாக ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததகாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று இந்திய தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரள முதல்வரின் உத்தரவுப்படி நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கேரள முதல்வரின் அலுவலகம் கூறியுள்ளது. 

.