This Article is From Jun 20, 2019

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் 4 பேர் பாஜகவில் இணைந்தனர்!!

சந்திரபாபு நாயுடு தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் உள்ளார். எம்எல்ஏக்கள் கட்சி தாவியது பதற்றத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ள அவர், தனது கட்சியை பலவீனப்படுத்த பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி படுதோல்வியை சந்தித்தது.

ஹைலைட்ஸ்

  • மாநிலங்களவை உறுப்பினர்கள் 4 பேர் பாஜகவில் சேர்ந்தனர்
  • துணை குடியரசு தலைவரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர்
  • கட்சிக்குள் பிரச்னை ஏற்படுவது சாதாரணம் என்கிறார் சந்திரபாபு நாயுடு
New Delhi:

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி மாநிலங்களவை எம்.பி.க்கள் 4 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இன்று மாலை துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவை சந்தித்து தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். 

ஒய்.எஸ். சவுத்ரி, சி.எம். ரமேஷ், கரிகாபோடி மோகன் ராவ், டி.ஜே. வெங்கடேஷ் ஆகிய 4 தெலுங்கு தேச எம்.பி.க்கள் ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கின்றனர். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை எம்.பி.க்கள் சந்தித்தபோது பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா உடன் இருந்தார். 

தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திர பாபு நாயுடு தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் இருந்து வருகிறார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், எம்.பி.க்கள் கட்சி மாறியதால் தான் கவலைப்படப் போவதில்லை என்றும், தனது கட்சியை பலவீனப்படுத்தும் பாஜகவின் நடவடிக்கையை கண்டிப்பதாகவும் கூறினார். 

மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தற்போது 102 உறுப்பினர்கள் இருக்கின்றனர். மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மாநிலங்களவையில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் மாநிலங்களவை உறுப்பினர்களை அதிகமாக்குவதில் பாஜக ஆர்வம் காட்டி வருகிறது. 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த ஆண்டு மத்திய பாஜக அமைச்சரவையில் இருந்து விலகினார். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 

ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மொத்தம் உள்ள 25 இடங்களில் 22 இடங்களை கைப்பற்றியது. 

.