This Article is From May 27, 2020

"மிக மோசமான போருக்கு தயாராகுங்கள்": சீன ராணுவத்திற்கு ஜின்பிங் உத்தரவு!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் மோதல் போக்கு நிலவும் நிலையில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மே.22 தேதியன்று சீனா தனது பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட்டை 6.6 சதவீதம் அதிகரித்து, 179 பில்லியன் டாலராக உயர்த்தியது.

Beijing:

மிக மோசமான போருக்கு தயாராகுங்கள் என சீன ராணுவத்திற்கு உத்தரவிட்ட அந்நாட்டு அதிபர் ஜின்பிங், நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் பாதுகாக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். எந்தவொரு அச்சுறுத்தல் குறித்தும் அவர் குறிப்பிட்டு கூறவில்லை என்றாலும், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் மோதல் போக்கு நிலவும் நிலையில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். 

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், வாழ்நாள் முழுவதும் ஆட்சியில் இருப்பதற்கான வாய்ப்புகளை கொண்டவராகவும், 20 லட்சம் வீரர்களின் வலிமை கொண்ட ராணுவத்தின் தலைவராகவும் ஷி ஜின்பிங் (66), இருக்கிறார். இந்நிலையில், பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் ஒரு பகுதியாக ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஜின்பிங் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

மோசமான சூழ்நிலைகளைப் பற்றி சிந்தித்து, பயிற்சி மற்றும் போர் தயார் நிலை அளவிடவும், அனைத்து வகையான சிக்கலான சூழ்நிலைகளையும் உடனடியாகவும், திறம்படவும் கையாளவும், தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை உறுதியுடன் பாதுகாக்கவும் என்று ஜின்பிங் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு குறிப்பிட்ட சிக்கல்கள் குறித்தும் குறிப்பிடாமல், ஜின்பிங் கூறியதாக அந்நாட்டு அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுபாட்டு பகுதி உட்பட பல பகுதிகளில் அண்மையில் இந்திய மற்றும் சீனப் படைகள் பெரும் ராணுவ கட்டமைப்பை அமைத்து வருகின்றன. பதட்டத்தை அதிகரிப்பதும், இரண்டு பக்கங்களிலும் அந்தந்த நிலைகளை பலப்படுத்துவதும் என ஒரு தெளிவான சமிக்ஞையில், அவர்கள் இரண்டு வாரங்களாக ஈடுபட்டு வருகின்றனர். 

ஏறக்குறைய 3,500 கி.மீ நீளமுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறை எல்லையாகும்.

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் ராணுவ மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் உருவானது குறித்து வார்த்தைப் போர் நடந்து வருகிறது. 

கடந்த மே.22 தேதியன்று, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் இரண்டாவது நாடாக சீனா தனது பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட்டை 6.6 சதவீதம் அதிகரித்து, 179 பில்லியன் டாலராக உயர்த்தியது. இது இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். 

.