This Article is From Mar 04, 2020

''முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும்படி யாரும் கோரவில்லை'' - உத்தவ் தாக்கரே

முஸ்லிம்களுக்குக் கல்வியில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் நவாப் மாலிக் கூறியிருந்தார். இந்த நிலையில் அதுதொடர்பான முன்மொழிவு ஏதும் இல்லை என முதல்வர் உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார்.

''முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும்படி யாரும் கோரவில்லை'' -  உத்தவ் தாக்கரே

முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்க வேண்டாம் என்கிறார் உத்தவ்.

ஹைலைட்ஸ்

  • இடஒதுக்கீடு தொடர்பாக மசோதா கொண்டுவரப்படும் என்றார் என்.சி.பி. அமைச்சர்
  • டெல்லி கலவரம் போன்று மும்பையில் ஏதும் நடக்காது என்கிறார் உத்தவ்
  • டெல்லி வன்முறைக்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியுமென உத்தவ் கூறுகி
Mumbai:

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற முறையான கோரிக்கையோ, திட்டமோ மகாராஷ்டிர அரசிடம் இல்லை என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

முஸ்லிம்களுக்குக் கல்வியில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் நவாப் மாலிக் கூறியிருந்தார். இந்த  நிலையில் அதுதொடர்பான முன்மொழிவு ஏதும் இல்லை என முதல்வர் உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று சிறுபான்மைத்துறை அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்த நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் இருந்து இத்தகைய பதில் வந்திருக்கிறது. 

இதுதொடர்பாக உத்தவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற முறையான முன்மொழிவு அரசிடம் கொண்டு வரப்படவில்லை. அவ்வாறு வரும்போது நாங்கள் அதுபற்றி பரிசீலனை செய்வோம். இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக பாஜக போன்ற கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களது சக்தியை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

கட்சியின் இதழான சாம்னாவின் ஆசிரியராக எனது மனைவி ராஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்பாராத விதமாக நான் முதல்வர் ஆனதால் எனது சாம்னா ஆசிரியர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டேன்.

சாம்னா, சிவசேனா, தாக்கரே ஆகியவற்றைப் பிரிக்க முடியாது. நாங்கள் ஒரே குடும்பம். ராஷ்மி பொறுப்பேற்ற பின்னர் சாம்னாவின் வடிவம் மாறும் என்கிறார்கள். அப்படி ஏதும் நடக்காது. ஆசிரியர் குழுவை சஞ்சய் ராவத் கவனிப்பார்.

சாம்னா என்பது சிவசேனாவின் கட்சிப் பத்திரிகை. அதில் கட்சி மற்றும் எனது நிலைப்பாடுகள் வெளி வரும். இருப்பினும் ஆசிரியர் குழு சுதந்திரமாகச் செயல்படும்.

டெல்லியில் நடந்ததைப் போன்ற வன்முறை மும்பை, மகாராஷ்டிராவில் ஏற்படாமல் இருக்க நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதற்காக காவல்துறை மற்றும் மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கலவரத்தை யார் செய்தார்கள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். 

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

.