This Article is From Mar 04, 2019

எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்..?- மவுனம் உடைத்த விமானப்படை தளபதி

26 ஆம் தேதி நடந்த அதிரடி தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன

தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், 100 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளதாக மத்திய அரசு தரப்பு தொடர்ந்து சொல்லி வருகிறது

Coimbatore:

பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் கடந்த மாதம் 26 ஆம் தேதி, இந்திய விமானப்படை, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்குச் சொந்தமான தீவிரவாத முகாமில் குண்டு போட்டது. இந்தத் தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்கின்ற தகவல் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் இந்திய விமானப்படையின் தளபதி பி.எஸ்.தனாவ் அது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். 

இன்று கோயம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த தனாவ், ‘விமானப்படைத் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்து சொல்ல முடியாது. அங்கு எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெரிந்தால்தான் அது சாத்தியப்படும். 

எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதை எண்ணும் நிலைமையில் விமானப்படைக்கு அப்போது சூழல் அமையவில்லை' என்றார். 

26 ஆம் தேதி நடந்த அதிரடி தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வரும் முரணான செய்திகளால், மொத்த ஆப்பரேஷன் குறித்தும் தற்போது பல கேள்விகள் எழுந்துள்ளன.

தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், 100 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளதாக மத்திய அரசு தரப்பு தொடர்ந்து சொல்லி வந்தாலும், கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் குஜராத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, ‘அதிரடி தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்று கூறியுள்ளார். 

விமானப்படைத் தளபதி தனாவ் மேலும் கூறுகையில் ‘நாங்கள் தீவிரவாத முகாமில் தாக்குதல் நடத்தியது உண்மைதான். அப்படியில்லை என்றால் ஏன் பாகிஸ்தான் தரப்பு நம் மீது பதில் தாக்குதல் தொடுக்க வேண்டும். நாங்கள் வெறுமனே காட்டுப் பகுதியில் குண்டு வீசியிருந்தால், பாகிஸ்தான் ஏன் சீற்றம் கொள்ள வேண்டும்' என்று கேள்வி எழுப்பினார். 

விங் கமாண்டர் அபிநந்தன் குறித்து தனாவ் பேசுகையில், ‘அபிநந்தன் எப்போது பணிக்குத் திரும்பார் என்பது இப்போது சொல்ல முடியாது. அது அவரின் மருத்துவ சோதனைகளை அடுத்துத்தான் சொல்ல முடியும். விமானத்திலிருந்து, எஜெக்ட் ஆகி பாராஷூட் மூலம் தப்பிப்பது என்பது உடலை பெருமளவு பாதிக்கும். அவர் அந்த தாக்கத்திலிருந்து சீக்கிரமே மீண்டுவிட்டால், உடனடியாக பணியில் அமர்த்தப்படுவார். ஆனால், இந்த விவகாரத்தில் அவசரப்பட மாட்டோம்' என்று விளக்கம் அளித்தார். 

.