இன்று காலை தமிழக முதல்வர் தனது வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கினார்.
தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை - உண்மையான காரணங்களை தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். முதல்வரின் சுற்றுப் பயணம் இன்று காலை தொடங்கியது. 3 நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் வரும் 10-ம்தேதி தமிழகம் திரும்புகிறார்.
இந்த நிலையில் முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
“தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன்” என்று முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் 14 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடு சென்றிருக்கிறார்.
இதற்கு முன்பு, வெற்று விளம்பரச் செலவுகள் செய்து நடத்தப்பட்ட முதல் இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரப் போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா? இல்லவே இல்லை!
இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்பு அமைச்சர்கள் வெளிநாடு சென்றபோது, செல்லாத முதலமைச்சர், அந்த மாநாடு முடிந்து ஏழு மாதங்கள் கழித்து வெளிநாடு போவது ஏன்?
வெளிப்படையாக நான் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் முதலமைச்சர், தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை - உண்மையான காரணங்களை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் கேள்விக்கு முறையாக பதில் சொல்லாமல், உள்நோக்கம் கற்பிக்கும் முதலமைச்சருக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.