This Article is From Apr 15, 2020

மக்கள் பட்டினி கிடப்பதைப் பற்றி அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை; திருமா வேதனை!

கொரோனா நோய்த்தொற்றுச் சூழலை தனது அதிகார குவிப்புக்கும், சுய விளம்பரத்துக்கும், வாய்ச்சவடால்களுக்கும் மட்டுமே மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.

மக்கள் பட்டினி கிடப்பதைப் பற்றி அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை; திருமா வேதனை!

மக்கள் பட்டினி கிடப்பதைப் பற்றி அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை; திருமா வேதனை!

ஹைலைட்ஸ்

  • மக்கள் பட்டினி கிடப்பதைப் பற்றி அரசு சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை
  • பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம்
  • பொருளாதாரத்தை மீட்பதற்கோ எந்தவொரு திட்டமும் அதனிடம் இல்லை.

ஊரடங்கு நீட்டிப்பு நேரத்தில் மக்கள் பட்டினி கிடந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த மாதம் 25-ம்தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனினும், இந்த இடைப்பட்ட நாட்களில் வைரஸ் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி மே.3ம்தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாகவும், மக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், பேரிடர் காலத்தில் மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நடந்துகொள்ளும் மத்திய அரசின் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாதவது, மே மாதம் 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டிருக்கும் இரண்டாம்கட்ட முழு அடைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் புதிய வழிகாட்டும் நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் மக்களுக்கான நிவாரணம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை. பேரிடர் காலத்தில் மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நடந்துகொள்ளும் மத்திய அரசின் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம் போன்ற அறிவுரைகளையே மீண்டும் கூறியுள்ளது. மக்கள் பட்டினி கிடந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி மத்திய அரசு சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

பட்டினியால் செத்துவிடுவோம் எனப் பயந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மும்பையிலும் சூரத்திலும் வீதியில் இறங்கிக் குரலெழுப்பத் தொடங்கிவிட்டனர். செவிலியர்கள் தமது பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்றுச் சூழலை தனது அதிகார குவிப்புக்கும், சுய விளம்பரத்துக்கும், வாய்ச்சவடால்களுக்கும் மட்டுமே மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. மக்களைக் காப்பதற்கோ, பொருளாதாரத்தை மீட்பதற்கோ எந்தவொரு திட்டமும் அதனிடம் இல்லை.

உருப்படியான ஆலோசனைகளை கூறக்கூடிய அதிகாரிகளையும் மோடி அரசு வைத்திருக்கவில்லை என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுவருகிறது. இதனால் நோய்த் தொற்றில் இறப்பவர்களைவிட பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். 

.