கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காஷ்மீரில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
New Delhi: அடுத்து வரும் நாட்களில் ஜம்மூ காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காஷ்மீரில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இணையம் மற்றும் போன் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
“ஜம்மூ காஷ்மீரில் இருக்கும் நிலைமை நாளுக்கு நாள் சீரடைந்து வருகிறது. எனவே அங்கிருக்கும் கட்டுப்பாடுகள் பகுதி பகுதியாக நீக்கப்படும்” என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு கூறியுள்ளது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஜம்மூ காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜம்மூ காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370 ரத்து செய்யப்படுவது குறித்தும் ஜம்மூ காஷ்மீர், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்பது குறித்தும் மத்திய அரசு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.