This Article is From Sep 19, 2018

கருணாநிதி குறித்த கருத்து: கடம்பூர் ராஜூவுக்கு துரை முருகன் கண்டனம்!

மெரினா விவகாரத்தில் தமிழக அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது

கருணாநிதி குறித்த கருத்து: கடம்பூர் ராஜூவுக்கு துரை முருகன் கண்டனம்!

மறைந்த முதல்வர் கருணாநிதியின் (Karunanidhi) உடல், பலகட்ட பிரச்சனைகளுக்கு பிறகு மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா நினைவிடம் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறினார். அவரின் கருத்துக்கு திமுக-வின் (DMK) பொருளாளர் துரை முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மறைந்த பிறகு, அண்ணா நினைவிடம் பக்கத்தில் அடக்கம் செய்ய, அவரது மகனும் திமுக-வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் (M.K. Stalin), முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் (Edappadi Palaniswamy) நேரில் சென்று கோரிக்கை வைத்தார். அப்போது முதல்வர், ‘பல சட்ட சிக்கல் இருக்கிறது. பார்க்கலாம்’ என்று மட்டும் பதில் கூறி அனுப்பினார். தொடர்ந்து தமிழக அரசு சார்பில், ‘மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கப்பட முடியாது. அவருக்கு கிண்டியில் இடம் ஒதுக்கப்படும்’ என்று அறிக்கை வெளியிடப்பட்டது.

இதையடுத்து திமுக தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று போடப்பட்டது. அந்த வழக்கு உடனடியாக விசாரிக்கப்பட்டு, ‘மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய எந்தத் தடையும் இல்லை’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து தான் முழு அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘அண்ணா நினைவிடத்துக்கு அருகில் கருணாநிதிக்கு உயர் நீதிமன்றம் இடம் வழங்கிய போது, நாங்கள் அது குறித்து மேல் முறையீடு செய்யாமல் பெருந்தன்மையுடன் அமைதி காத்தோம். கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிடத்துக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு நாங்கள் நீட்டிய உதவிக்கரம் தான் காரணம்’ என்று விளக்கம் அளித்தார்.

கடம்பூர் ராஜூவின் கருத்துக்கு துரை முருகன், ‘அவரின் கருத்தே அவரின் தரத்தைக் காண்பிக்கிறது. அவர் அமைச்சராகவோ தலைவரகவோ இருக்க தகுதி இல்லாதவர். அதிமுக ஒன்றும் எங்களுக்கு அடக்கம் செய்ய உரிமையைத் தரவில்லை. நீதிமன்றம் தான் உரிமை வழங்கியது’ என்று கூறியுள்ளார்.

.