This Article is From Jul 15, 2020

‘நவம்பரில் கட்சி ஆரம்பிப்பார் சூப்பர் ஸ்டார் ரஜினி..!’- நெருங்கிய அரசியல் புள்ளி தகவல்!!

சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பேன் என்பது குறித்துப் பேசினார்.

‘நவம்பரில் கட்சி ஆரம்பிப்பார் சூப்பர் ஸ்டார் ரஜினி..!’- நெருங்கிய அரசியல் புள்ளி தகவல்!!

தனக்கு முதல்வராகும் விருப்பமில்லை என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த்.

ஹைலைட்ஸ்

  • அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது
  • கமலின் 'மய்யம்' கட்சி அதில் போட்டியிட உள்ளது
  • இதுவரை கட்சி ஆரம்பிப்பது குறித்து ரஜினி எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்து ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அரசியல் களம் காண உள்ளதாக தெரிவித்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. தேர்தலில் பிரவேசம் பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே ரஜினி, கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை கட்சி ஆரம்பிப்பது குறித்து அவர் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில் ரஜினிக்கு மிக நெருக்கமானவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமாக செயல்பட்டு வந்த கராத்தே தியாகராஜன், “ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று சிலர் சொல்கிறார்கள். அந்தத் தகவல் பற்றி அறிந்தேன். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், ஆகஸ்ட் மாதம் கட்சி ஆரம்பிக்க சாத்தியமில்லை. ஆனால் அதிலிருந்து ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின்னர், நவம்பர் மாதத்தில் சூப்பர் ஸ்டார் கட்சி ஆரம்பிப்பார்” என்று உறுதிபட தகவல் தெரிவித்துள்ளார். 

சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பேன் என்பது குறித்துப் பேசினார். அப்போது, தனக்கு முதல்வராகும் விருப்பமில்லை என்றும் அவர் கூறினார். 

“தமிழக களத்தில் தற்போது இரண்டு பெரிய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களை எதிர்ப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. அதே நேரத்தில் விட்டுவிட்டும் போக முடியாது” என்று சூசகமாக தெரிவித்திருந்தார் ரஜினி. 

தமிழக அரசியலை உற்று நோக்கி வரும் பலரும் ரஜினி, பாஜகவுடன் இணைந்துதான் தேர்தலை சந்திப்பார் என்று சொல்கிறார்கள். இன்னொரு தரப்பினர் ரஜினி, தனியாகவே தேர்தல் களத்தை சந்திப்பார் என்கின்றனர். நடிகர் கமல்ஹாசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‘மக்கள் நீதி மய்யம்' கட்சியை ஆரம்பித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. மய்யம் கட்சியும் அடுத்த ஆண்டுதான் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க உள்ளது.

.