This Article is From Jan 25, 2020

கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்!

குடியுரிமை சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசமும் வழங்கியுள்ளது.

கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்.

Jaipur:

கேரளா, பஞ்சாப்  மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பாஜக தலைவர்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர், மேலும், சிஏஏவுக்கு ஆதரவாக கோஷங்களயும் எழுப்பினர். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசமும் வழங்கியுள்ளது. மேலும், அரசு முடிவை கேட்காமல் எந்தவொரு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான், ஆப்கான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட 6 மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்காக குடியுரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மத அடிப்படையில் பாகுபாட்டினை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல் மாநிலமாக, கேரள மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கேரளாவைத் தொடர்ந்து, இரண்டாவதாக காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது மூன்றாவது மாநிலமாக காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

.