வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், வளிமண்டல மேலடுக்கில் ஏற்படும் சுழற்சி காரணமாக குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 2 நாட்களுக்கு குமரி கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் இன்று வரையிலான கால கட்டங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 38 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. தற்போதைய இயல்பு அளவு 33 செ.மீ. இது இயல்பை விட 16 சதவீதம் அதிகம் ஆகும்.
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
முன்னதாக, நேற்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும்போது, தெற்கு ஆசிய நாடுகளுக்கான வடகிழக்கு பருவமழைக்கான முன் அறிவிப்பின்படி, இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையும் இயல்பான அளவுக்கு இருக்கும்.
தமிழ்நாட்டின் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 53% அதிகம் பெய்துள்ளது. அக்டோபர் மாதம் 2வது வாரம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.