This Article is From Apr 28, 2019

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிரடி!

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண், பிப்ரவரி 24-ல் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் மீது புகார் அளித்தார்.

நேற்று 10 பெண் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

Pollachi, Tamil Nadu:

பொள்ளாச்சியில் பல இளம் பெண்களை ஓர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்து தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக அடுத்தடுத்து வீடியோ வெளியானது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சமீபத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சிபிஐ அமைப்பு, கடந்த ஒரு மாதமாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது, 8 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் ஆட்சிபுரியும் அதிமுக-வுக்கு நெருக்கமானவர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய மாநில எதிர்கட்சிகள், நீதிமன்ற கண்காணிப்பிலான விசாரணையை கோரின. இதையடுத்து கடந்த மார்ச் 13 ஆம் தேதி, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு.

மார்ச் மாதமே இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணி உள்ளிட்ட 8 பேர் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மார்ச் மாதமே சிபிஐ விசாரணைக்கு சிபாரிசு செய்யப்பட்ட போதும், ஏப்ரல் முதல் வாரம் வரை தமிழக அரசு தரப்பிலிருந்து முறையான ஆவணம் கொடுக்கப்படவில்லை. இதனால் விசாரணை தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. 

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண், பிப்ரவரி 24 ஆம் தேதி, காவல் துறையிடம் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் மீது புகார் அளித்தார். அந்தப் பெண்ணிடம் இந்த 4 பேரும் அத்துமீறியதாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணிடம் இருந்த தங்க சங்கிலியைப் பறித்தது மட்டுமல்லாமல், அத்துமீறியதை நால்வரும் சேர்ந்து வீடியோ எடுத்துள்ளதாகவும், விஷயத்தை வெளியே சொன்னால் வீடியோவை வெளியே விட்டுவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. 

அதைத் தொடர்ந்து புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கியதாகக் கூறி பிப்ரவரி 26 ஆம் தேதி ஒரு புகார் கொடுக்கப்பட்டது. 

நேற்று 10 பெண் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

அதேபோல பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் நிரந்த புகார் கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் பெண் வழக்கறிஞர்கள் மாநில பெண்கள் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த புகார் கமிட்டியில் ஓய்வு பெற்ற நீதிபதி, பெண் வழக்கறிஞர்கள், மனநல மருத்துவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். 

பொள்ளாச்சி சம்பவம் குறித்து விசாரணையில் காவல் துறையினர் மெத்தனமாக நடந்து கொண்டது என்று எதிர்கட்சிகள் உட்பட பல தரப்பினர் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, பல உள்ளூர் காவலர்களுக்கு பணியிட மாற்றம் அளிக்கப்பட்டது. அதில் முக்கியமானவர், வழக்கை விசாரித்த எஸ்.பி பாண்டியராஜன். அவர்தான், காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

‘பொள்ளாச்சி கும்பலால் அதிகம் பாதிக்கப்பட்டது கல்லூரி பெண்கள்தான். முதலில் சமூக வலைதளங்கள் மூலம் இளம் பெண்களிடம் நட்பாக பழகும் அந்த கும்பல், ஒரு கட்டத்திற்கு மேல் பெண்களை உணவகத்துக்கு அழைப்பது, பயணத்துக்கு அழைப்பது என்பதை செய்துள்ளது. பெண்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, பாலியல் அத்துமீறல்களில் அந்த கும்பல் ஈடுபட்டுள்ளது. அதை வீடியோவாக எடுத்து, பெண்களை மிரட்டியும் வந்துள்ளது' என்று தமிழக போலீஸ் பிரச்னை குறித்து விளக்குகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று காவல் துறை தரப்பு தகவல் தெரிவிக்கிறது. 


 

.