This Article is From Sep 29, 2019

2016 Surgical Strikes-க்கு முந்தைய நாள் என்ன நடந்தது..? - மனம் திறந்த PM Modi

ஜம்மூ காஷ்மீரின் உரியில் (Uri) நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் (Surgical Strike) நடத்தப்பட்டது.

கடந்த வெள்ளிக் கிழமை, பிரதமர் மோடி (PM Modi), ஐ.நா கூட்டத்தில் (UNGA) 17 நிமிடங்கள் உரையாற்றினார். அவர் பருவநிலை மாற்றம் (Climate Change), வளர்ச்சி மற்றும் தீவிரவாதம் குறித்து தனது உரையில் பேசினார்.

ஹைலைட்ஸ்

  • டெல்லி விமான நிலையத்தில் PM Modi-க்கு உற்சாக வரவேற்பு
  • UNGA கூட்டத்தை முடித்துக் கொண்டு தாயகம் வந்தார் PM Modi
  • PM Modi, surgical strike பற்றி தனது உரையில் பேசினார்
New Delhi:

நியூயார்க் நகரத்தில் நடந்த 74வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் (UNGA) பங்கேற்றுவிட்டு, தாயகம் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Narendra Modi), டெல்லி விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவர் அங்கு கூடியிருந்த ஏராளமான மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (Kashmir) பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது இந்தியா கடந்த 2016 ஆம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் (Surgical Strike) நடத்தியது. அந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், அதில் துணிச்சலுடன் ஈடுபட்ட ராணுவ வீரர்களைப் பாராட்டினார்.

தனது உரையின்போது மோடி, “2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நான் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். ஆனால், இந்த முறை அவர்கள் என்னை அணுகிய விதத்தில் மிகப் பெரிய மாற்றம் இருப்பதைப் பார்த்தேன். இந்தியா மீது அவர்களுக்கு மரியாதை அதிகரித்திருப்பதற்குக் காரணம் இந்த நாட்டின் 130 கோடி குடிமக்கள்தான்” என்றார். 

சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து அவர் பேசுகையில், “3 ஆண்டுகளுக்கு முன்னர், செப்டம்பர் 28 ஆம் தேதி நான் தூங்கவே இல்லை. ஒவ்வொரு கணமும் எப்போது தொலைபேசி அழைப்பு வரும் என்று எதிர்நோக்கிக் காத்திருந்தேன். 2016, செப்டம்பர் 28 அன்று, இந்த நாட்டின் ராணுவ வீரர்கள், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு இந்தியாவின் பெருமையை நிலைநாட்டினார்கள். அதை நினைத்துப் பார்க்கிறேன். நமது வீரர்களுக்குத் தலை வணங்குகிறேன்” என்று சிலாகித்தார். ஜம்மூ காஷ்மீரின் உரியில் (Uri) நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. உரி தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தில் மிக முக்கியமானது, ‘ஹவுடி, மோடி' (Howdy, Modi) நிகழ்ச்சி. ஹூஸ்டனில் நடந்த அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் கலந்து கொண்டார். இரு நாட்டுத் தலைவர்களும் இந்தியா - அமெரிக்காவுக்கு இடையில் உள்ள வர்த்தக உறவில் இன்னும் நெருக்கமாக செயல்படுவது என்று முடிவெடுத்தனர். வளர்ச்சி மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படுவது என்றும் அவர்கள் உறுதியேற்றனர். 

கடந்த வெள்ளிக் கிழமை, பிரதமர் மோடி, ஐ.நா கூட்டத்தில் 17 நிமிடங்கள் உரையாற்றினார். அவர் பருவநிலை மாற்றம், வளர்ச்சி மற்றும் தீவிரவாதம் குறித்து தனது உரையில் பேசினார். அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தால் இந்தியா பாகிஸ்தான் இடையில் அணு ஆயுதப் போர் வர வாய்ப்புள்ளதாக எச்சரித்தார். 

தனது அமெரிக்கப் பயணம் குறித்து பிரதமர் மோடி, “நான் இந்தப் பயணத்தின் போது எங்கு சென்றாலும், யாரைப் பார்த்தாலும், இந்தியா குறித்து நேர்மறையாக பேசினார்கள். அதேபோல இந்தியா, சுகாதாரம், வறுமையை ஒழித்தல் உள்ளிட்டவற்றில் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் பலரும் பாராட்டினார்கள்” என்று ட்விட்டர் மூலம் கருத்திட்டார். 

 
 

.