This Article is From Jun 08, 2019

‘’காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்கலாம்’’ – மோடிக்கு இம்ரான்கான் அழைப்பு

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

‘’காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்கலாம்’’ – மோடிக்கு இம்ரான்கான் அழைப்பு

மே 26ம்தேதி பிரதமராக மோடி பதவியேற்ற போது அவருக்கு இம்ரான்கான் வாழ்த்து கூறியிருந்தார்.

Islamabad:

காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது-

இந்திய பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பு ஏற்றதுக்கு வாழ்த்துக்கள். இரு தரப்பில் உள்ள பிரச்னைகள் பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

தெற்காசிய பகுதியின் வளர்ச்சிக்கு வறுமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு 2 நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது அவசியம். காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது.

இவ்வாறு இம்ரான் கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பே காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டி வந்தது.

அதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் இந்தியா கொடுத்த தொடர் அழுத்தத்தின் விளைவாக மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. சபை அறிவித்தது.

இந்த விவகாரம் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் உறவில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் கடந்த மே 26-ல் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றதற்கு இம்ரான் கான் வாழ்த்துக் கூறினார். இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து இம்ரான் கான் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதற்கிடையே ஸ்கோ மாநாட்டில் பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை ஏதும் இல்லை என்று இந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.