This Article is From Jul 09, 2018

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

2012-ம் ஆண்டு டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

New Delhi:

2012-ம் ஆண்டு டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா ஆகியோர், தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற இன்று தீர்ப்பை வழங்கியது. அதில், குற்றவாளிகள் பாலியல் பலாத்காரத்திலும், கொடுமைபடுத்தும் செயல்களிலும் ஈடுபட்டது உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட மரண தண்டனையில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை என்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டெல்லி நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனை உத்தரவை, உச்ச நீதிமன்ற உறுதி செய்திருந்த நிலையில், குற்றவாளிகள் இரண்டாவது முறையாக மேல் முறையீடு செய்திருந்தனர். தூக்கு தண்டனை பெற்ற 4 பேரில் மூன்று பேர் மட்டுமே மேல் முறையீடு செய்தனர். நான்காவது குற்றவாளியான அக்‌ஷய் குமார், மேல் முறையீடு செய்யவில்லை.

தூக்கு தண்டனையில் இருந்து விடுபட, இன்னும் ஒரே ஒரு முறை மட்டுமே மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. அதற்கு பின் குடியரசு தலைவரிடம் பொது மன்னிப்பு கோரி மனு செய்வதே கடைசி வாய்ப்பு.

“எங்களுக்கு நீதியின் மீதும் உச்ச நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கையுள்ளது” என்று தீர்ப்பு குறித்து நிர்பயாவின் தாய் கருத்து தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 16,2012 ஓடும் பேருந்தில் பாலியல் பலாதகாரம் செய்யப்பட்டு, படுகாயங்களுடன் 16 நாட்கள் போராடி உயிரிழந்தார் அந்த மருத்துவ மாணவி. அந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து போராடும் விதமாக, அந்த கல்லூரி மாணவிக்கு நிர்பயா ( அச்சமற்றவள்) என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

.