This Article is From Mar 03, 2020

''இந்தியாவில் நீதி தாமதம் ஆக்கப்படுவதை உலகமே பார்க்கிறது'' - நிர்பயா தாயார் கடும் தாக்கு!!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் உள்ளதால் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட முடியாது என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது தாமதமாகுவது இந்திய அமைப்பின் செயலற்ற தன்மையை காட்டுவதாக ஆஷா தேவி கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
  • குடியரசு தலைவரிடம் பவன் குப்தா கருணை மனுத்தாக்கல் செய்துள்ளார்
  • நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்துள்ளார் ஆஷா தேவி.
New Delhi:

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை தூக்குத் தண்டனை இல்லையென்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி,'இந்தியாவில் நீதி தாமதம் ஆக்கப்படுவதை உலகமே பார்க்கிறது' என்று விமர்சித்துள்ளார். 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பியுள்ளார். இது நிலுவையில் இருப்பதால், குற்றவாளிகளைத் தூக்கிலிட முடியாது என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

குற்றவாளிகள் தூக்கிலிடுவது தாமதம் ஆக்கப்படுவது, இந்திய அமைப்பின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. இந்தியாவில் நீதி தாமதம் ஆக்கப்படுவதை உலகமே பார்க்கிறது. குற்றவாளிகளுக்கு ஆதவராக சிஸ்டம் உள்ளது. நான் ஒவ்வொரு நாளும் நம்பிக்கை இழக்கிறேன். ஆனால் அதே நாளில் நான் மீண்டும் நம்பிக்கை உடையவள் ஆகிறேன். எப்படியாயினும் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள். நிர்பயாவை விட மோசமான வழக்கு இருக்க முடியாது. இருந்தாலும் நான் நீதிக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீதிமன்றம் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் கூறுகையில், 'என் மனைவி ஒரு தாய். அவளது வலியை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஏன், என்னால் கூட அதனை உணர முடியாது. நமக்கும் எப்படியும் நீதி கிடைக்கும் என்று கூறு அவளை ஆறுதல் படுத்தி வருகிறேன். ஆனால் ஒரு தாயாக அவரது மகளுக்கு நேர்ந்ததை அவரால் மறக்க முடியவில்லை' என்றார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை காலை 6 மணிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் இருப்பதால் தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 

தெற்கு டெல்லியில் 2012 டிசம்பர் 6-ம்தேதி 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா (அச்சமற்றவள்) ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

பல்வேறுகட்ட சிகிச்சைகளுக்குப் பின்னர் அவர் சிங்கப்பூரின் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் டிசம்பர் 29-ம்தேதி அவரது உயிர் பிரிந்தது.

இந்த சம்பவத்தில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் குமார் சிங், பவன் குப்தா, ராம் சிங் மற்றும் சிறுவன் ஒருவன் என 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். 

இதில் முகேஷ், வினய், அக்சயின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். ராம் சிங் சிறையில் தற்கொலை செய்துகொள்ளக் குற்றவாளியான சிறுவன் தனது தண்டனைக் காலத்தைச் சீர்திருத்தப் பள்ளியில் கழித்த பின்னர் விடுவிக்கப்பட்டான்.

இந்த நிலையில் கடைசி வாய்ப்பாக மீதம் இருக்கும் பவன் குப்தா தற்போது குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுவை அனுப்பியுள்ளார். இந்த மனு நிலுவையில் இருப்பதால் குற்றவாளிகள் 4 பேரையும் நாளை தூக்கிலிட முடியாது என்று டெல்லி நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

.