குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பிரணாப் முகர்ஜி விருது பெறும் காட்சி.
New Delhi: முன்னாள் குடியரசு தலைவரும், முது பெரும் அரசியல்வாதியுமான பிரணாப் முகர்ஜிக்கு நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது இன்று வழங்கப்பட்டுள்ளது. டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இந்த விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பிரணாப் முகர்ஜி பெற்றுக் கொண்டார்.
பிரணாப் முகர்ஜியுடன் மறைந்த பிரபல பாடகர் பூபேன் ஹசாரிகா மற்றும் ஜன சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும், காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்தவருமான பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 2012-ல் குடியரசு தலைவர் பதவி அளிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2017-ல் அவரது பதவிக் காலம் முடிந்தது.
காங்கிரஸ் கட்சியில் மட்டுமே 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரணாப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இந்திய அரசியலில் மரியாதையுடன் பார்க்கப்படும் அரசியல் தலைவர்களில் ஒருவராக பிரணாப் இருக்கிறார்.
பிரணாபை தவிர்த்து முன்பு குடியரசு தலைவர்களாக இருந்த டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், ஜாகிர் உசேன், விவி கிரி ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது.