This Article is From Feb 05, 2020

'ஆசிரியர்கள் தற்போதுள்ள பாடத்தை சொல்லிக் கொடுத்தாலே போதும்' - செங்கோட்டையன்

5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை ஆசிரியர்கள் திருப்பி கொடுக்க வேண்டும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

'ஆசிரியர்கள் தற்போதுள்ள பாடத்தை சொல்லிக் கொடுத்தாலே போதும்' - செங்கோட்டையன்

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

5 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு இந்த கல்வி ஆண்டில் இருந்தே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நாடு முழுவதும் பொதுத்தேர்வு நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இந்த பொது தேர்வு மாணவர்களின் தரத்தை உயர்த்தும். ஆகையால் கட்டாயம் இந்த பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

இந்நிலையில், நேற்று 5 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது, வழக்கம் போலவே அவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் என்று அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தியதற்கு கிடைத்த வெற்றி என்று கூறுவது முற்றிலும் தவறான செய்தி. 

மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருமளவிற்கு மீண்டும் பயிற்சி அளித்து பரிசீலனை செய்யலாம் என்று தான் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 


சில ஆசிரியர் சங்கங்கள் அரசு பள்ளிகளில் இந்தி விருப்ப பாடமாக வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது என்ற கேள்விக்கு, ஆசிரியர்கள் தற்போது இருக்கின்ற பாடத்தை ஒழுங்காக சொல்லிக் கொடுத்தாலே போதும் என்று பதிலளித்தார். மேலும் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை ஆசிரியர்கள் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

.