This Article is From Jun 09, 2020

அசாமில் எண்ணெய் வயலில் பயங்கர தீ விபத்து! பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

விபத்து குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன், அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் நிலைமை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசாமில் எண்ணெய் வயலில் பயங்கர தீ விபத்து! பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 30 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று ஆயில் இந்தியா லிமிட்டெட் தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • அசாம் எண்ணெய் வயலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது
  • எண்ணெய் வயலை சுற்றிலும் சுமார் 6 ஆயிரம்பேர் வெளியேற்றம்
  • தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Guwahati:

அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் ஆயில் இந்தியா லிமிட்டெட்டுக்கு சொந்தமான எண்ணெய் வயலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த எண்ணெய் கிணற்றில் கடந்த 2 வாரங்களாக எரிவாயு கசிவு ஏற்பட்டு வந்தது. இந்த சூழலில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

சிங்கப்பூரை சேர்ந்த எண்ணெய் வயல் நிபுணர்கள், நேற்று இந்த எண்ணெய் வயலை பார்வையிட்டு எரிவாயு வெளியேற்றத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.

விபத்து ஏற்பட்டிருக்கும் எண்ணெய் கிணறு தலைநகர் கவுகாத்தியில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இங்கு கடந்த மே 27-ம்தேதி வாயுக் கசிவு ஏற்பட்டது.

தற்போது எண்ணெய் வயல் விபத்து தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணைய தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த எண்ணெய் வயலுக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவில், திப்ரு சைகோவா தேசிய உயிரியல் பூங்கா மற்றும் உயிரின பாதுகாப்பு பூங்காக்கள் அமைந்துள்ளன. விபத்தால் இவற்றின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

வயல் வெளிகள் மற்றும் தேயிலை தோட்டங்களிலும் எரிவாயுவின் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அங்கு பணியாற்றும் தொழிலாளர்களும், விவசாயிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் வயல் அமைந்திருக்கும் பகுதியில் இருந்து, 1.50 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 30 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று ஆயில் இந்தியா லிமிட்டெட் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து எரிவாயுக் கசிவை சரி செய்யுமாறு மத்திய அரசுக்கு மாநில முதல்வர் சர்வானந்த சோனாவால் கோரிக்கை வைத்துள்ளார்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன், அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் நிலைமை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.