This Article is From Oct 08, 2018

“டெல்லி தெருக்களில் பிச்சையெடுக்கும் சிறுவர்களை அகற்றுங்கள்”- மத்திய அமைச்சர் உத்தரவு

டெல்லியில் இணை காவல் ஆணையர்கள் 4 பேரிடம் நடத்திய கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேனகா காந்தி பிச்சையெடுக்கும சிறுவர்களை அகற்ற வேண்டும் என்றார்

“டெல்லி தெருக்களில் பிச்சையெடுக்கும் சிறுவர்களை அகற்றுங்கள்”- மத்திய அமைச்சர் உத்தரவு

நாட்டின் கண்ணாடியாக டெல்லிய இருக்க வேண்டும் என்கிறார் மேனகா காந்தி.

New Delhi:

நாட்டின் தலைநகர் டெல்லியில் சிறுவர்கள் பிச்சையெடுத்து வருவது அதிகரிப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் மத்திய பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி டெல்லியில் இன்று அவசர கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இதில் பெண் இணை காவல் ஆணையர்கள் அஸ்லம் கான், மேக்னா யாதவ், மோனிகா பரத்வாஜ், நுபுர் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின்போது, டெல்லி தெருக்களில் பிச்சையெடுக்கும் சிறுவர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

டெல்லி தெருக்களில் பல சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி மயங்கி கிடப்பதை பார்க்க முடிகிறது. அவர்களை மீட்டு மறுவாழ்வு இல்லத்தில் காவல் அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். சிலர் அவர்களது பெற்றோர் என்று கூறி வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

நாட்டின் தலைநகரான டெல்லி, மற்ற பகுதிகளுக்கு கண்ணாடியாக (முன் உதாரணமாக) திகழ வேண்டும். டெல்லியில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பிச்சையெடுக்கும் சிறுவர்கள் மீட்கப்பட வேண்டும் என காவல் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மேனகா காந்தி கூறினார்.

டெல்லியில் மட்டும் 36 சிக்னல்களில் சுமார் 600 சிறுவர்கள் பிச்சை எடுப்பதாக சிறுவர்கள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று ட்ராபிக் ஏற்படும் சமயங்களில் பிச்சை எடுத்தல், பேனா, பென்சில், பலூன் உள்ளிட்ட பொருட்களை விற்குமாறு சிறுவர்களை அவர்களது பெற்றோர் நிர்பந்திப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 

.