This Article is From Jul 11, 2019

“ஏன் இவ்வளவு பேராசை..!”- கர்நாடக அரசியல் குழப்பம்; பாஜக-வை வறுத்தெடுத்த மம்தா

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணியிலிருந்த 18 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பாஜக முகாம் நோக்கி சென்றுள்ளனர்

“ஏன் இவ்வளவு பேராசை..!”- கர்நாடக அரசியல் குழப்பம்; பாஜக-வை வறுத்தெடுத்த மம்தா

அதிருப்தி எம்.எல்.ஏ-க்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை மாநில சட்டசபை சபாநாயகர் இடத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Kolkata:

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவி வரும் சூழலில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “கர்நாடகத்தில் பாஜக, குதிரைபேரத்தில் ஈடுபட்டு வருகிறது. மும்பையில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை அக்கட்சி சிறைவைத்துள்ளது” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 

அவர் மேலும் கொதிப்புடன் கூறுகையில், “நமது நாட்டு அரசியல் சட்ட சாசனம் ஆபத்தில் உள்ளது. பாஜக-வின் இந்த அணுகுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஊடகத்தின் வாயிலாக எனக்கொரு விஷயம் புரிந்தது. மும்பையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலவந்தமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் அவர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்குள் கூட பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 

இதைப் போன்ற குதிரை பேரத்தை ஊக்குவித்தால் ஜனநாயகம் செத்துப் போகும். ஜனநாயகத்துக்காக போராடும் பிராந்திய மற்றும் மற்ற கட்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். எனக்கு ஒரு விஷயம் தான் புரியவே இல்லை. எதற்காக பாஜக இவ்வளவு பேராசை கொண்டு அலைகிறது என்று புரியவில்லை. அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று அந்தக் கட்சி நினைக்கிறது. கர்நாடகாவில் வேலை முடிந்தததும் பாஜக, தனது கவனத்தை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானை நோக்கித் திருப்பும். அரசுகளை கலைப்பதுதான் அவர்களது வேலையா?” என்று கறாராக கேள்விகளை எழுப்பியுள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணியிலிருந்த 18 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பாஜக முகாம் நோக்கி சென்றுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ-க்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை மாநில சட்டசபை சபாநாயகர் இடத்தில் ஒப்படைத்துள்ளனர். சபாநாயகர் இன்னும் அவர்களது ராஜினாமாவை ஏற்கவில்லை. அவர்கள் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில், பாஜக, மாநிலத்தில் பெரும்பான்மை பெரும். 

கர்நாடகாவில் நிகழும் அரசியல் குழப்பத்தை சரி செய்ய அம்மாநில மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் நிர்வாகி டி.கே.சிவக்குமார், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தங்கியுள்ள மும்பை ஓட்டலுக்கு நேரில் சென்றுள்ளார். அவர் ஓட்டலுக்கு உள்ளே செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை.

.