This Article is From Apr 15, 2019

ராகுல் பிரதமராக வந்தால் மாற்றம் ஏற்படும் என குஷ்பு கூறியது உண்மைதான்: பொன்ராதாகிருஷ்ணன்

ராகுல் பிரதமராக வந்தால் மாற்றம் ஏற்படும் என குஷ்பு கூறியது உண்மைதான் என மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ராகுல் பிரதமராக வந்தால் மாற்றம் ஏற்படும் என குஷ்பு கூறியது உண்மைதான்: பொன்ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து பொய் மட்டுமே கூறிவருகிறார். மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், குஷ்புவுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராகுல் காந்தி பிரதமராக வந்தால் தான் மாற்றம் ஏற்படும் என்று குஷ்பு சொல்வது உண்மைதான். அவர் பிரதமர் ஆனால் இப்போது விழித்து இருக்கும் மக்கள் அனைவரும் தூங்கி விடுவார்கள்.

உலக நாடுகளின் தலைவர்கள் முன்பு தலை நிமிர்ந்து பேசியவர் தான் பிரதமர் மோடி. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர்கள் யாராவது இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று இவர்களால் கூறமுடியுமா?

பிரதமர் மோடி கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்? என்பது இங்குள்ள வாக்காளர்களுக்கு தெரியும். இம்மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி திட்டங்கள் அதற்கு பதிலாக அமையும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் உறுதியான வளர்ச்சி திட்டம் என்பதால் ஒரு சிலரின் தூண்டுதல் பேரில் தடை வந்துள்ளது. 8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் விரும்பும் போது அதனை யாராலும் தடுக்க முடியாது. கூட்டணிக்கு அதிமுகவை பாஜக மிரட்டி பணிய வைத்ததாக குற்றச்சாட்டுகள் கூறும் மு.க.ஸ்டாலின் அதனை வேட்பு மனு தாக்கல் செய்த போதே கூறி இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
 

.