This Article is From Nov 07, 2019

முரசொலி பஞ்சமி நிலமல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் நிரூபிப்போம்: மு.க.ஸ்டாலின் உறுதி

முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது, தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒவ்வொரு கழகத் தொண்டனின் உயிர் மூச்சுமாகும்.

முரசொலி பஞ்சமி நிலமல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் நிரூபிப்போம்: மு.க.ஸ்டாலின் உறுதி

இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன்.

முரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார். 

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான, முரசொலியின் அலுவலகம் இருக்குமிடம், ஒரு பஞ்சமி நிலம் என சில நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போதே மறுத்து கண்டனம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், பாஜக மாநிலச் செயலாளர் டாக்டர் சீனிவாசன், இது குறித்து விசாரிக்க வேண்டும் என புகார் மனு அளித்திருந்தார். தொடர்ந்து, இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க தேசிய ஆணையமும் உத்தரவிட்டது. 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளையாம் முரசொலியின் மீது தொடர்ச்சியான அவதூறு; பஞ்சமி நிலத்தினை வாங்கினோமென்று!

முதலில், மரியாதைக்குரிய மருத்துவர் இராமதாசு அவர்கள், 17/10/2019 அன்று, ஒர் அறிக்கையினை வெளியிட்டார்கள். முரசொலி நிலம் பஞ்சமி நிலமென்றும் குறிப்பிட்டார்கள். அன்றே, அது பச்சைப் பொய்யென்று, பட்டா நகலின் ஆதாரத்துடன் மறுப்பு அறிக்கை தந்தோம். அவர் சொன்னதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்றும்; அப்படி நிரூபிக்கத் தவறினால், அவரும், அவரது மகன் மருத்துவர் அன்புமணி ராமதாசு அவர்களும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அறைகூவல் விடுத்தோம். அதன் பின் அங்கிருந்து பதிலில்லை.

மீண்டும் 19/10/2019-ல் மூலப் பத்திரத்தினைக் காட்டிடவில்லையென்று ஒர் அறிக்கை தந்தார். பொதுவெளியிலும் சரி, நீதிமன்றத்திலும்; குற்றம் சுமத்தியவர்தானே நிரூபித்திட வேண்டும்!

முரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம்.

21/10/2019 அன்று பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் இதுகுறித்துப் புகார் அளித்தார். தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக தலைமைச் செயலாளருக்கு பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் புகாரின் அடிப்படையில் 22/10/2019 அன்றே நோட்டீஸ் அனுப்புகிறது. இதனிடையே, மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், 24/10/2019 அன்று, பஞ்சமி நிலமாக இருந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்; அதன் உண்மைத்தன்மை ஆராயப்படும் என்று பேட்டியளித்தார்.

04/11/2019 அன்று, மீண்டும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு, 19/11/2019 அன்று ஆஜராக உத்தரவிட்டிருப்பதாய் செய்திகள் மூலம் அறிந்தேன்; அரசு நிர்வாகத்தில்தான் என்னே ஒரு வேகம்!

முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது, தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒவ்வொரு கழகத் தொண்டனின் உயிர் மூச்சுமாகும். அதன் மீது, கேவலம், தற்காலிகமான அரசியல் லாபத்திற்காக, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல; கழகத்தின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.

"முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன்!" என, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளுக்கு உறுதியளிக்கிறேன்.

இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.