This Article is From Nov 27, 2019

மகாராஷ்டிராவில் முதல்வர் இல்லாமல் எம்எல்ஏக்கள் பதவியேற்பு: காரணம் தெரியுமா?

Maharashtra Government: மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து, நாளைய தினம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்கிறார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் இல்லாமல் எம்எல்ஏக்கள் பதவியேற்பு: காரணம் தெரியுமா?

தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கடந்ததை தொடர்ந்து மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றனர்.

Mumbai:

14வது மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் பதவியேற்பு இன்று நடைபெற்றது. ஆட்சி அமையாமல், முதல்வர் நியமனம் செய்யப்படாமல், சட்டமன்ற அமர்வு கூடிய அரிதான நிகழ்வாக காணப்பட்டது. 

இதுதொடர்பாக மகாராஷ்டிரா விதான் பவன் செயலாளர் ராஜேந்திர பகவத் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்தியாவில் கடந்த இரண்டு தசாப்தங்களாக முதல்வர் பதவியேற்ற பின்னரே மற்ற உறுப்பினர்கள் பதவியேற்று வந்தனர். 

இதைத்தொடர்ந்து, உடனடியாகவோ, அல்லது பின்வரும் அமர்வுகளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது, முதல்வர் பதவியேற்காமல், சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. 

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பு காரணமாக இந்த பதவியேற்பு விழா நடைபெற வேண்டிய கட்டாயமாகியுள்ளது. அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றவுடன், சட்டமன்ற தலைவர் மற்றும் அமைச்சரவை இல்லாமல் அவை இயங்கும் என்று அவர் தெரிவித்தார். 

மேலும், முதல்வர் பதவியேற்ற பின்னர் அமைச்சரவையை அவர் அமைப்பார். இதைத்தொடர்ந்து, முதல் அமைச்சரவை கூட்டத்தில் அடுத்த முழு சட்டமன்ற கூட்டம் எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். அந்த சட்டமன்ற கூட்டத்தின் போது, அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அவர் கூறினார். 

மகாராஷ்டிராவில் இன்று காலை சிறப்பு சட்டமன்ற அமர்வு கூடியது. இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கொலம்கார் அவர்களுக்கு பதவியேற்று வைத்தார். மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கடந்ததை தொடர்ந்து, பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு பின்னர் மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றனர். 

முன்னதாக, மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், திடீரென ஆட்சி அமைப்பது, ஜனநாயக விரோதமானது என்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்திருந்தன. 

இந்த வழக்கு விசாரணையில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தங்களுக்கு இருப்பதாகவும், துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 54 எம்எல்ஏக்கள் உட்பட 170 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையிலே ஆளுநர் பகத்சிவ் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்திருந்தது. 

இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க காலதாமதம் ஆனால், குதிரை பேரத்திற்கு வாய்ப்பு உள்ளதால் ஜனநாயகத்தை காக்கும் கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. இதுபோன்ற நேரத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதே சரியானதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

.