This Article is From Jul 31, 2018

பாக்., பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்கத் திட்டம்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பி.டி.ஐ கட்சித் தலைவர் இம்ரான் கான் பதவி ஏற்க உள்ளார்

பாக்., பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்கத் திட்டம்
New Delhi:

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பி.டி.ஐ கட்சித் தலைவர் இம்ரான் கான் பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்பு விழாவுக்கு இந்திய பிரதமர் மோடியை அழைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா உள்பட சார்க் நாடுகளின் பிரதமர்களை அழைக்க உள்ளதாகவும், அக்கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 25-ம் தேதி நடந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது இம்ரான் கானின், பாகிஸ்தான் டெஹ்ரிக்- இ - இன்சஃப் கட்சி. இருந்த போதும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாமல் இருக்கிறது.

வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி பாகிஸ்தான் பிரதமராக தான் பதவி ஏற்பதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி தொலை பேசி மூலம் வாழ்த்து கூறினார். இது இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவை புதுப்பிக்கும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

வாழ்த்துக்கு நன்றி கூறிய இம்ரான் கான், “போருக்கு பதில், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம் “ என்று பிரதமர் மோடியிடம் கூறியதாக பி.டி.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது.

பிரதமர் மோடியை அழைப்பது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசனையை பெற உள்ளதாகவும், பி.டி.ஐ கட்சியின் மூத்த தலைவர் ஃபவாத் சவுத்ரி கூறினார்.

2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே உறவு சிக்கலில் இருக்கிறது. ஆனால், 2014-ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற போது பாக்., பிரதமர் நவாஸ் ஷரிஃப் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அதேபோல் நவாஸ் ஹரிஃபின் பிறந்த நாளுக்கு லாகூர் சென்று வாழ்த்திவிட்டு வந்தார் இந்திய பிரதமர் மோடி.

சுமூகமாக இருப்பது போல இருந்த நிலையில், 2016-ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக், மற்றும் தீவிரவாத தாக்குதல்களால் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

இப்போது மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே நட்புறவு ஏற்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

.