This Article is From Sep 09, 2019

அரசியல் ஓய்வு கொடுக்கும் வகையிலேயே தமிழிசைக்கு ஆளுநர் பதவி: திருமா சாடல்!

சிதம்பரத்தை போன்று ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என பாஜக தலைவர்கள் கூறிவருவது, அது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறாது. 

அரசியல் ஓய்வு கொடுக்கும் வகையிலேயே தமிழிசைக்கு ஆளுநர் பதவி: திருமா சாடல்!

அரசியல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலேயே ஆளுநர் பதவி வழங்கியது ஏனென்று தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 

தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்ற தமிழிசைக்கு வாழ்த்துக்கள். பாஜக தலைமை தமிழிசை சவுந்தரராஜன் அரசியல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலேயே ஆளுநர் பதவி வழங்கியது ஏனென்று தெரியவில்லை. துடிப்புடன் செயல்படும் தமிழிசைக்கு அரசியலில் இன்னும் செயல் பட மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வழங்கி இருக்கலாம்.

பாஜக அரசின் 100 நாள் ஆட்சி வேதனை அளிக்கிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் சட்டம், தகவல் உரிமை சட்டத் திருத்தம் கண்டிக்கத்தக்கது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை குறித்து அற்புதம்மாளை அழைத்துக்கொண்டு அமித்ஷாவிடம் சென்று முறையிட்டோம். இது தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக வளர்ச்சிக்காக சென்றுள்ள வெளிநாட்டு சுற்றுப்பயணம் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அவர் நாடு திரும்பி அறிக்கை வெளியிட்ட பின்னரே மேலும் கருத்து கூற முடியும்.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் சாதிமத குறித்த பாடத்திட்டத்தை நீக்க வேண்டும். அதில் அம்பேத்கரை தலித் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்தை கண்டித்து சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நாளை நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் 12-ந் தேதி நடைபெறும்.

சிதம்பரத்தை போன்று ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என பாஜக தலைவர்கள் கூறிவருவது, அது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறாது. 

இஸ்ரோ விஞ்ஞானிகள் படைத்திருப்பது மிகப்பெரிய சாதனைதான். சந்திரயான்-2 பின்னடைவு சந்திப்பதற்காக விஞ்ஞானிகள் கலங்க வேண்டியதில்லை தொடர்ந்து முயற்சிகளை விஞ்ஞானிகள் செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

.