This Article is From Jun 17, 2020

லடாக்கில் மோதல் ஏற்பட காரணம் என்ன? - இந்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்

“இரு தரப்புகளும் அமைதியான முறையில் பின்வாங்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சீனத் தரப்பு, எல்லைக் கட்டுப்பாட்டை மீறி கல்வான் பகுதியில் நடந்து கொண்டது"

லடாக்கில் மோதல் ஏற்பட காரணம் என்ன? - இந்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்

கர்னல் பி.சந்தோஷ் பாபு, ஹவில்தார் பழனி மற்றும் சிப்பாய் ஓஜா ஆகிய மூன்று இந்திய ராணுவ வீரர்கள்தான் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல் வந்தது.

ஹைலைட்ஸ்

  • கடந்த சில வாரங்களாக இந்தியா - சீனாவுக்கு இடையே மோதல் போக்கு நிலவுகிறது
  • லடாக் பகுதியில்தான் பதற்றம் நிலவி வருகிறது
  • சீனத் தரப்பிலும் உயிரிழப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது
New Delhi:

கடந்த திங்கட் கிழமை இரவு, சீனாவுடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்கிற அதிர்ச்சித் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த மோதல் குறித்து அமைச்சகம், “சீனத் தரப்பு தான்தோன்றித் தனமாக எல்லையில் உள்ள கட்டுப்பாட்டையும் நடைமுறைகளையும் மீறி செயல்பட்டதே இந்த இரு தரப்பு மோதலுக்குக் காரணம்,” என்று கூறியுள்ளது. 

கர்னல் பி.சந்தோஷ் பாபு, ஹவில்தார் பழனி மற்றும் சிப்பாய் ஓஜா ஆகிய மூன்று இந்திய ராணுவ வீரர்கள்தான் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல் வந்தது. கடந்த சில வாரங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் லடாக் பகுதியில் உரசல் போக்கு நீடித்து வந்த நிலையில், அது குறித்து இரு தரப்புகளும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தின. அதன் முடிவில் இரு நாடுகளும் ராணுவத் துருப்புகளை விலக்கிக் கொள்வதாக முடிவெடுத்தது. இப்படி சீனத் தரப்புத் தங்களது படைகளை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்தபோதுதான் 3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். 

கர்னல் சந்தோஷ் பாபு மீது சீன ராணுவத்தினர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஆயுதங்கள் இல்லாத சண்டை இரு தரப்புக்கும் இடையே நடந்துள்ளது. திங்கட்கிழமை பின்னிரவு நேரத்தில் மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் இது குறித்து வெளியவுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, “சீனத் தரப்பு தான்தோன்றித் தனமாக எல்லையில் உள்ள கட்டுப்பாட்டையும் நடைமுறையையும் மீறி செயல்பட்டதே, 15 ஜூன், 2020 அன்று இரு தரப்பு மோதலுக்குக் காரணம். இதன் விளைவாக இரு தரப்பிலும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புகளும் பேசி போட்டுக் கொண்ட உடன்படிக்கையை சீன ராணுவம் பின்பற்றியிருந்தால் இந்த மோதல் தவிர்க்கப்பட்டிருக்கலாம்” என்றார். 

இந்திய - சீன எல்லையில் உள்ள கிழக்கு லடாக் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், தூதர ரீதியிலும் ராணுவ ரீதியிலும் அதைத் தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்துதான் கடந்த ஜூன் 6 ஆம் தேதி, இரு தரப்பும் அமைதியாக கலைந்து செல்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது. உயர்மட்ட ரீதியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து, பாதுகாப்பின் முன்னணியில் இருக்கும் ராணுவத் தரப்புகள் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்துள்ளன. 

வெளியுறவுத் துறை, “இரு தரப்புகளும் அமைதியான முறையில் பின்வாங்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சீனத் தரப்பு, எல்லைக் கட்டுப்பாட்டை மீறி கல்வான் பகுதியில் நடந்து கொண்டது.

இந்திய ராணுவத் தரப்பு, தங்களின் அனைத்து செயல்பாடுகளையும் இந்திய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே செய்து வருகின்றது. அதையேதான் சீனத் தரப்பிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதற்கு தற்போதுள்ள முரண்பாடுகளை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில் இந்தியாவின் இறையாண்மையையும் நிலப்பகுதியையும் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்று கூறியுள்ளது. 


 

.