This Article is From Feb 29, 2020

அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மம்தா பானர்ஜி! தேசிய அரசியலில் பரபரப்பு!!

குடியுரிமை சட்டத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மம்தா பானர்ஜியும், அமித் ஷாவும் ஒருவரையொருவர் தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மம்தா பானர்ஜி! தேசிய அரசியலில் பரபரப்பு!!

நவீன் பட்நாயக்கின் விருந்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, மம்தா பானர்ஜி.

ஹைலைட்ஸ்

  • ஒடிசாவில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது
  • மம்தாவுடனான சந்திப்புக்கு பின்னர் எதிர்க்கட்சிகளை அமித் ஷா விமர்சித்தார்
  • முதலில் டெல்லி வன்முறை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்கிறார் மம்தா
New Delhi:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வைத்த விருந்தில் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பல்வேறு விவகாரங்களில் ஒருவரையொருவர் அமித் ஷாவும், மம்தாவும் தாக்கிப் பேசி வரும் நிலையில், இருவரின் சந்திப்பு தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


புவனேஸ்வரத்தில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். 

உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா முதன்முறையாக ஒடிசாவுக்கு வந்துள்ளார். மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு அமித் ஷா பேசினார்.

இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்யுரைத்து வருகின்றன என்று அமித் ஷா குற்றம் சாட்டினார். 

அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தால் சிறுபான்மையினரின் குடியுரிமை பறிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மம்தா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். அவர்கள் ஏன் பொய்யுரைத்துக் கொண்டிருக்கின்றனர்?. குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்றார்.

 முதன்முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமையைத் தீர்மானிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வரும் முஸ்லிம் அல்லாதோருக்குக் குடியுரிமை சட்டத்திருத்தம் குடியுரிமையை வழங்குகிறது. இதில் இஸ்லாமியர்களைத் தவிர்த்து என்று குறிப்பிட்டிருப்பதுதான் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது என்று கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

எதிர்க்கட்சிகள் குறித்து விமர்சித்த அமித் ஷா, 'தவறான பிரசாரங்கள் மூலமாக மக்களை தூண்டிவிட்டு எதிர்க்கட்சிகள் வன்முறையை உருவாக்குகின்றன' என்றார்.

டெல்லியில் நடந்து வரும் வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு போலீசார் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர். உயிரிழப்புகளுக்காக உள்துறை அமைச்சகத்தை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது தொடர்பாக மம்தா பானர்ஜியிடம் கேட்டபோது, 'முதலில் பிரச்சினை சரி செய்யப்பட வேண்டும். அதன்பின்னர் நாம் அரசியல் பற்றிப் பேசலாம்' என்று பதில் அளித்தார். 

.