This Article is From Aug 29, 2018

‘மாற்றுக் கருத்துதான் ஜனநாயகத்தைக் காக்கும் கருவி!’- உச்ச நீதிமன்றம்

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி புனே காவல் துறை நேற்று 5 பிரபலமான செயற்பாட்டளர்களை கைது செய்தது

‘மாற்றுக் கருத்துதான் ஜனநாயகத்தைக் காக்கும் கருவி!’- உச்ச நீதிமன்றம்
New Delhi:

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி புனே காவல் துறை நேற்று 5 பிரபலமான செயற்பாட்டளர்களை கைது செய்தது. இது இந்திய அளவில் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது இன்று விசாரிக்கப்பட்டது. வரும் 5 ஆம் தேதிக்குள், கைதுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கு பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள 5 செயற்பாட்டளர்களும் வரும் 6 ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் வைக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது.

மாவோயிச சிந்தனையாளர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், செயற்பாட்டளர்கள் அருண் ஃபெரேரா, கவுதம் நவால்கா, வெர்னன் கோன்சால்வேஸ் ஆகியோர்தான் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்

‘மாற்றுக் கருத்து தான் ஜனநாயகத்தை பாதுகாக்கும் கருவி. அந்தக் கருவி இல்லாவிட்டால் ஜனநாயகம் கேள்விக்குறியாகும்’ என்று வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான சந்திரசூத் கருத்து தெரிவித்துள்ளார்.

புனே காவல் துறை தரப்பு, ‘செயற்பாட்டளர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பீமா- கொரேகன் வன்முறையில் சம்பந்தப்பட்டதாக ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது இந்த கைது நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. மாவோயிசம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக இந்த கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

செயற்பாட்டளர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்துக்குக் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம் மூலம், கைது வாரன்ட் இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும். மேலும் கைதிகள் பிணையில் வெளியே வர முடியாது. போலீஸ் தரப்பும் 90 நாட்களுக்கு பதிலாக 180 நாட்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எடுத்துக் கொள்ளலாம்.

.