அசாம் மாநிலத்தில் கொலை சம்பவம் நடந்துள்ளது.
Guwahati: அசாமில் தோழியைக் கொன்று சடலத்தை எரித்தவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொலையை மறைக்க உதவிய ஆண் நண்பரின் தாய் மற்றும் சகோதரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் சுவேதா அகர்வால். இவர் அங்குள்ள கே.சி. தாஸ் கல்லூரியில் வர்த்தகப் படிப்பை படித்து வந்தார். கல்லூரி அவரும் கோவிந்த் சிங்கால் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சுவதோ கோவிந்த் வீட்டிற்கு கடந்த டிசம்பர் 2017- ல் சென்றுள்ளார். அப்போது திருமணம் பற்றி இருவரும் பேசியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே மோதல் அதிகமாக சுவேதாவை கோவிந்த் தள்ளியுள்ளார்.
சுவற்றில் மோதியதில் சுவேதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதன்பின்னர் கோவிந்தின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் சேர்ந்து கொலையை மறைக்க முயற்சி செய்து, சுவேதாவை தீயிட்டு கொளுத்தினர். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மூவரும் இந்த முயற்சி எடுத்தனர்.
இந்த நிலையில் கோவிந்தின் குளியலறையில் சுவேதாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் 3 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் கோவிந்துக்கு மரண தண்டனையும், தாய் மற்றும் சகோதரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கொலையான மாணவி சுவேதா அகர்வால், 12-ம் வகுப்பு தேர்வில் அசாமில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.