This Article is From Jun 02, 2020

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மும்பையில் நாளை ’நிசார்கா புயல்’ கரையை கடக்க வாய்ப்பு!

Cyclone Nisarga: நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது, மாநிலத்தின் தயார்நிலை குறித்து அவர் கேட்டறிந்ததாக முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மும்பையில் நாளை ’நிசார்கா புயல்’ கரையை கடக்க வாய்ப்பு!

அடுத்த 12 மணி நேரத்தில் நிசர்கா ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.

Mumbai:

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மும்பை நகரத்தில் நாளை நிசார்கா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சிரிக்கை விடுத்துள்ளது. 

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்கரைகளை நோக்கிச் செல்லும் "நிசர்கா" புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து, நாளை மும்பை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1882 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவின் நிதி மூலதனமாக இருக்கும் மும்பை பகுதியை பாதிக்கும் முதல் தீவிர புயல் இதுவாகும். 

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

இன்று அதிகாலை கோவாவுக்கு 280 கி.மீ தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 490 கி.மீ தொலைவிலும், குஜராத்தில் இருந்து 710 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில் மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதனால், இன்று பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது. 

நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது, மாநிலத்தின் தயார்நிலை குறித்து அவர் கேட்டறிந்ததாக முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இன்று உருவாக உள்ள புயலுக்கு நிசார்கா என பெயரிடப்பட்டுள்ளது. நிசார்கா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நிசார்கா புயல் காரணமாக, மேற்கு இந்திய பகுதிகள், குறிப்பாக மகாராஷ்டிராவின் சில பகுதிகள் (மும்பை, பால்கர், தானே, ராய்காட்), கோவா மற்றும் குஜராத் மாநிலங்களில் மணிக்கு 115 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இதன் காரணமாக மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று பிற்பகலுக்கு பிறகு கிழக்கு-மத்திய அரபிக்கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் கிழக்கு-மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக் கடல் மற்றும் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடற்பகுதிகளுக்கு ஜூன் 3 வரை மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

.