This Article is From Nov 19, 2018

‘மத்திய அமைச்சருக்கு லஞ்சம்..!’- பணி மாறுதலான சிபிஐ அதிகாரி ‘திடுக்’ தகவல்

அரசின் முடிவுக்கு எதிராக சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கும்.

அலோக் வெர்மாவுக்கு எதிராக மத்திய விசாரணை ஆணையம் நடத்திய விசாரணை குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் நாளை அறிக்கை சமர்பிக்கப்படும்

New Delhi:

சிபிஐ அமைப்பின் சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரி, இன்று உச்ச நீதிமன்றத்தின் முன்னர் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார். 

சிபிஐ அமைப்பில் சென்ற மாதம் பெரும் குழப்பம் நிலவியதை அடுத்து, அமைப்பின் பல அதிகாரிகளுக்கு பணி மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்படி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சிபிஐ அதிகாரி மணிஷ் குமார் சின்ஹா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இன்று அந்த வழக்கு விசாரணையின் போது சின்ஹா, ‘என்னிடம் நீதிமன்றத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையிலான தகவல்கள் இருக்கின்றன. ஒரு மத்திய அமைச்சர் சில கோடிகள் லஞ்சம் வாங்கியது குறித்து என்னிடம் ஆதாரம் உள்ளது. எனது பணி மாறுதல் உத்தரவு என்பது, ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான விசாரணையை திசைத் திருப்ப எடுக்கப்பட்ட முயற்சியாகும்' என்று கூறினார். மேலும், தனது வழக்கு நாளையே அவசர வழக்காக கருதி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் சின்ஹா கோரினார்.

அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ‘எங்களை எந்த விஷயமும் அதிர்ச்சிக்குள்ளாக்காது' என்று பதில் அளித்தனர். மேலும், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் தெரிவித்து விட்டனர்

ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா குறித்து ஒரு வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இதிலிருந்து தன் பெயரை நீக்க சனா, ராகேஷ் அஸ்தானாவுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் இருக்கிறது. அஸ்தானா மீதான புகார் குறித்து சின்ஹா தான் விசாரணை செய்து வருகிறார். 

இது ஒரு புறமிருக்க, சதீஷ் சனாவிடம் சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்று மத்திய விசாரணை ஆணையத்திடம் சில மாதங்களுக்கு முன்னர் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார் அஸ்தானா. இதனால் சிபிஐ அமைப்புக்குள் பனிப் போர் மூண்டது. இதையடுத்து பிரதமர் அலுவலகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, வெர்மா, அஸ்தானா மற்றும் பல அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு அளித்து அனுப்பியது.

இந்நிலையில், அரசின் முடிவுக்கு எதிராக சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கும். அதேபோல அலோக் வெர்மாவுக்கு எதிராக மத்திய விசாரணை ஆணையம் நடத்திய விசாரணை குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் நாளை அறிக்கை சமர்பிக்கப்படும். 

.