ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், டெல்லி சிறப்பு நீதிமன்றம், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
New Delhi: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், டெல்லி சிறப்பு நீதிமன்றம், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த உத்தரவின் மூலம் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அமைப்பு, இருவரையும் கைது செய்ய முடியாது.
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது 2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் அனுமதியை பெறாமல், விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ப.சிதம்பரம் அனுமதி அளித்து விட்டார் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அனுமதியைப் பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் கூறப்படுகிறது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னதாக வாதம் செய்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர், 'சிதம்பரத்துக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு பிணை வழங்கப்பட்டால் அவர்கள், விசாரணையைக் குலைப்பதற்கு வாய்ப்புள்ளது. அவர்கள் இருவரும் விசாரணைக்குப் போதிய ஒத்துழைப்புத் தரவில்லை. எனவே, அவர்கள் இறும்புக்கரம் கொண்டு நடத்தப்பட வேண்டும்' என்று கூறியது.