This Article is From May 06, 2020

மே 7 முதல் டாஸ்மாக் திறப்பு; எதிர்ப்பு தெரிவித்து புதுவித போராட்டத்தில் குதித்த விசிக!

"இப்போராட்டம் அவரவர் வீட்டின் முன்னே நின்று ‘டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டாம்’ என முழக்கம் எழுப்பும் வகையில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது."

மே 7 முதல் டாஸ்மாக் திறப்பு; எதிர்ப்பு தெரிவித்து புதுவித போராட்டத்தில் குதித்த விசிக!

"மே7 அன்று டாஸ்மாக் - மதுக்கடைகளைத் திறந்து கொரோனா பரவலுக்குத் தமிழக அரசே துணை போவது அதிர்ச்சியளிக்கிறது."

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன
  • கொரோனா ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன
  • சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி கிடையாது

தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது அரசு. தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் மட்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்கப்படுவதைக் கண்டித்து இன்று காலை 11 மணி முதல் 11:30 மணி வரை வித்தியாசமான போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. 

இது குறித்து விசிக-வின் தலைவர் தொல்.திருமாவளவன், “மே7 அன்று டாஸ்மாக் - மதுக்கடைகளைத் திறந்து கொரோனா பரவலுக்குத் தமிழக அரசே துணை போவது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக அரசு தனது முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, மே 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் 11.30 வரை தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இப்போராட்டம் அவரவர் வீட்டின் முன்னே நின்று ‘டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டாம்' என முழக்கம் எழுப்பும் வகையில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது.

தமிழக அரசே, மதுபானக் கடைகளைத் திறக்காதே! மக்களைக் கொல்லத் துணியாதே! கொரோனா பரவச் செய்யாதே! குடிகெடுக்க முனையாதே! - என அனைவரும் நம் வாசலில் ஓங்கிக் குரல்கொடுப்போம்! வரும் கேட்டை உடன் தடுப்போம்!” என்று தெரிவித்துள்ளார். 
 

.