This Article is From Aug 26, 2018

ஒபாமாவுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் காலமானார்!

அமெரிக்காவின் மிக மூத்த அரசியல்வாதியும் செனட்டருமான ஜான் மெக்கெய்ன் 81 வயதில் காலமானார்

ஒபாமாவுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் காலமானார்!

ஹைலைட்ஸ்

  • மூளைப் புற்று நோய் காரணமாக மெக்கெய்ன் மறைந்தார்
  • அமெரிக்காவுக்காக வியட்நாம் போரில் பங்கெடுத்தவர் மெக்கெய்ன்
  • இறக்கும் போது மெக்கெய்னுடன் குடும்பத்தினர் உடனிருந்தனர்
Washington:

அமெரிக்காவின் மிக மூத்த அரசியல்வாதியும் செனட்டருமான ஜான் மெக்கெய்ன் 81 வயதில் காலமானார். மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த மெக்கெய்ன் கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் இருந்து விலகி சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். 

மெக்கெய்ன் மறைவு குறித்து அவரது அலுவலகத்திலிருந்து வெளியான அறிக்கையில், ‘செனட்டர் ஜான் சிட்னி மெக்கெய்ன் 3, ஆகஸ்ட் 25, 2018 அன்று மாலை 4:28 மணிக்கு காலமானார். அவரது உடலில் இருந்து உயிர் பிரியும் போது, அவரது மனைவி சிண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அவரது சொந்த மாகாணமான அரிசோனாவின் ஒரு இடத்தில், ‘மெக்கெய்ன், உங்கள் சேவைக்கு நன்றி’ என்று சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தது பலரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

மெக்கெய்ன் மறைவைத் தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு, ஜனநாயக கட்சியின் பாராக் ஓபாமாவுக்கு எதிராகத்தான் குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்ன், அமெரிக்க அதிபராக போட்டியிட்டார்.

இந்நிலையில் ஒபாமா, ‘நாம் எல்லோரும் மெக்கெய்னுக்குக் கடன்பட்டிருக்கிறோம். நானும் மெக்கெய்னும் இரண்டு வெவ்வேறு தலைமுறையிலிருந்தும், வெவ்வேறு பின்புலத்திலிருந்தும் வந்தவர்கள். ஆனால், உச்சபட்ச அரசியல் இடத்துக்காக போட்டியிட்டோம். ஆனால் நாங்கள் இருவரும் ஒரே விஷயத்துக்காகத்தான் போராடினோம்’ என்று உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘ஜான் மெக்கெய்ன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மீது எனக்கு ஆழமான மரியாதை இருந்தது’ என்று கூறியுள்ளார். 

அமெரிக்காவுக்காக வியட்நாம் போரில் பங்கெடுத்தவர் மெக்கெய்ன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போரின் போது, வியட்நாம் ராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அவர் 5 ஆண்டுகள் சிறையில் கொடுமைபடுத்தப்பட்டார். மெக்கெய்ன் செனட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்து வந்தார். 
 

.