This Article is From Jan 11, 2019

சபரிமலை கோயிலுக்குள் நுழைந்த 2 பெண்களுக்கு நேர்ந்த சிக்கல்..!

அந்தப் பெண்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கே போக முடியாத சூழல் உருவாகியுள்ளது. 

சபரிமலை கோயிலுக்குள் நுழைந்த 2 பெண்களுக்கு நேர்ந்த சிக்கல்..!

கொச்சியில்தான் பிந்துவும் கனகாவும் யாருக்கும் தெரியாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்

ஹைலைட்ஸ்

  • பிந்துவும் கனகாவும், நீதிமன்றத் தீர்ப்பையடுத்து கோயிலுக்குள் சென்றனர்
  • இரு பெண்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்துல் வருகிறது
  • இருவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்
KOCHI/NEW DELHI:

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குள் 'அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம்' என்று சென்ற ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகு, சில நாட்களுக்கு முன்னர் இரண்டு பெண்கள் உள்ளே சென்று தரிசனம் செய்தனர். வரலாற்றுச் சிறுப்புமிக்க இந்த சம்பவத்துக்கு வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கோயிலுக்கு உள்ளே சென்ற இரண்டு பெண்களுக்கும், வலதுசாரி அமைப்பினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால், அந்தப் பெண்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கே போக முடியாத சூழல் உருவாகியுள்ளது. 

கண்ணூர் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையில் ஆசிரியிராக பணி புரிபவர், 40 வயதாகும் பிந்து அம்மிணி. சிவில் ஊழியரான கனக துர்காவுக்கு 38 வயதாகிறது. இவர்கள் இருவரும்தான் ஜனவரி 2 ஆம் தேதி ஐயப்பனை தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி, கனகாவும் பிந்துவும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை அங்கிருந்த போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் இந்த மாதம் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளனர். ஆசை நிறைவேறினாலும், அவர்களின் செயலால் தொடர்ந்து மிரட்டலுக்கு உள்ளாகி வருகின்றனர். 

தன் நிலைமை குறித்து கனகா நம்மிடம் கூறுகையில், “காவல் துறையினர் முதல் எங்கள் நண்பர்கள் வரை, பலர் ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டாம். திரும்பி சென்று விடுங்கள் என்று கூறினர். ஆனால், எங்களுக்கு யாரைக் கண்டும் எதைக் கண்டும் அஞ்சவில்லை. எங்களின் ஒரே குறிக்கோள், எப்படியாவது சபரிமலை கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்துவிட வேண்டும் என்பது மட்டுமாகத்தான் இருந்தது” என்று விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து பிந்து பேசுகையில், “எங்கள் மாநிலத்தின் காவல் துறையின் மீதும், அரசின் மீதும் எனக்கு முழு நம்பிக்கையுள்ளது. மேலும் கேரளாவின் ஜனநாயக சமூகத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பாஜக, அவர்களின் கட்சிக்காரர்களை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது கோரிக்கையைச் சொன்னார். 

கொச்சியில்தான் பிந்துவும் கனகாவும் யாருக்கும் தெரியாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அரசு மீது முழு நம்பிக்கை வைத்து அவர்கள் அரவணைப்பில்தான் இருவரும் உள்ளனர். 

.