This Article is From Jul 09, 2020

தனியார் கல்லூரிகளில் 3 தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணைகளாகக் கட்டணம் வசூலிக்க தனியார் கல்லூரிகளை அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் கல்லூரிகளில் 3 தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தனியார் கல்லூரிகளில் 3 தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தனியார் கல்லூரிகளில் 3 தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதி என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு கடந்த ஏப்.20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. எனினும், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்டணம் வசூலிக்காமல் எப்படி ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத இதர பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தது. 

தொடர்ந்து, தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்பியிருந்தது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு உயர்கல்வித்துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பெற்றோரால் குழந்தைகளின் கல்விக் கட்டணங்களைச் செலுத்த இயலாத நிலை உள்ளது. 

ஏற்கனவே, ஊரடங்கு காரணமாக கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படவில்லை எனவும், தேர்வுகளை எப்போது நடத்துவது என இதுவரை முடிவு செய்யப்படவில்லை. கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கேள்வி எழவில்லை. 

இதனிடையே, உயர்நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், தனியார் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் என மூன்று தவணைகளாக வசூலிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் அரசுக்கு மனு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. 

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணைகளாகக் கட்டணம் வசூலிக்க தனியார் கல்லூரிகளை அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு சமீபத்தில் தான் ஒய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதால் அதற்கு சற்று காலதாமதமாகும். அதனால், தனியார் கல்லூரிகளில் மட்டும் கல்விக்கட்டணங்களை மூன்று தவணைகளாக வசூலித்துக்கொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.