This Article is From May 25, 2020

‘பாஜக சாதி அரசியல்!’- திருமாவின் 10 நெத்தியடி கேள்விகள்!!

"தலித் மக்களுக்கான மாநில ஆணையம் இன்னும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. அதனை உடனடியாக அமைக்க தமிழக முதல்வர் முன்வருவாரா? கூட்டணி கட்சி பாஜக இதனை வலியுறுத்துமா?"

‘பாஜக சாதி அரசியல்!’- திருமாவின் 10 நெத்தியடி கேள்விகள்!!

"தலித் ஊராட்சித் தலைவர்களை நாற்காலிகளில் அமரவிடாமல் தடுப்பதாக 3 இடங்களில் வழக்குப் பதிவாகியுள்ளதே; இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாஜக  வலியுத்துமா?"

ஹைலைட்ஸ்

  • சமூக வலைதள நேரலையில் கேள்விகளை எழுப்பியுள்ளார் திருமா
  • பாஜக, அதிமுக அரசுகளை அவிர் விமர்சித்துள்ளார்
  • பல்வேறு விஷயங்களைச் சுட்டிக்காட்டி பாஜகவை விமர்சித்துள்ளார் திருமா

சமீபத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிவிட்டதாக குற்றம் சாட்டி, அதிகாலையில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டது தமிழக அரசு. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகள், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசையும், மத்தியில் ஆளும் பாஜக அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாஜகவுக்கு 10 கேள்விகளை முன் வைத்துள்ளார். 

அதன்படி, 

‘1.தலித் மக்களுக்கான மாநில ஆணையம் இன்னும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. அதனை உடனடியாக அமைக்க தமிழக முதல்வர் முன்வருவாரா? கூட்டணி கட்சி பாஜக இதனை வலியுறுத்துமா?

2.ஆண்டுக்கு இரண்டு முறை முதல்வர் தலைமையில் நடைபெற வேண்டிய 'விழிகண்' கூட்டம் மூன்று ஆண்டுகளா நடைபெறவில்லையே; கூட்டணிகட்சியான பாஜக  ஏனென்று விளக்கம் கேட்குமா? உடனடியாக நடத்தச்சொல்லி முதல்வரை வலியுறுத்துமா?

3.தலித்துகளுக்கான துணைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென தமிழகஅரசு சட்டம் இயற்றவில்லையே; கூட்டணி கட்சியான பாஜக, ஏனென்று விளக்கம் கோருமா?அவ்வாறு சட்டம் இயற்றும்படி முதல்வரிடம் வலியுறுத்துமா? 

4.தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக தேசியகுற்ற ஆவணமையம் அறிவித்துள்ளது. சாதிவெறியர்களால் ஆணவக் கொலைகளும் அதிகரித்துள்ளன. இதுகுறித்து கூட்டணிகட்சியான பாஜக, தமிழகமுதல்வரிடம் விளக்கம் கேட்குமா? 

5.தலித் ஊராட்சித் தலைவர்களை நாற்காலிகளில் அமரவிடாமல் தடுப்பதாக 3 இடங்களில் வழக்குப் பதிவாகியுள்ளதே; இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாஜக  வலியுத்துமா?அந்த சாதிவெறியர்களை வெளிப்படையாக கண்டிக்குமா? தலித் தலைவர்களை நாற்காலியில் அமரவைக்குமா? 

6.பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் செய்ய இலவச உதவி எண் உள்ளதே; அதுபோல தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக புகார்செய்ய இலவச உதவி எண் வழங்க, கூட்டணிகட்சியான பாஜக தமிழக அரசை வற்புறுத்துமா? 

7.தமிழகத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் அண்மையில் ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தனது செருப்பைக் கழற்றச் சொன்னாரே; அவரை வன்கொடுமைத் தடுப்புச் சடத்தின்னி கீழ் கைது செய்ய வேண்டுமென கூட்டணி கட்சியான பாஜக, தமிழக முதல்வரிடம் வலியுறுத்துமா? 

8.சகோதரர் முருகன் அவர்களை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமித்தது, அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவா? அல்லது கட்சியை வழிநடத்தும் தலைமைக்குரிய தகுதி படைத்தவர் என்பதற்காகவா? இதுபற்றி பாஜக விளக்கம் தருமா? 

9.தனது இறுதிமூச்சுவரை சாதியத்தை/இந்துத்துவத்தை/ சனாதனத்தை /மூர்க்கமாக எதிர்த்த முரட்டுப் போராளி புரட்சியாளர் அம்பேத்கர் எதிர்ப்பின் உச்சமாக இந்து மதத்தைவிட்டு பல இலட்சம் பேரோடு வெளியேறியவர். அவரை எதிர்க்கத்தானே வேண்டும்? ஆதரிப்பது ஏன்? பாஜக விளக்குமா?

10.சாதி ஒழிப்புக்காக 10 லட்சம் பேருடன் ஒரே நாளில் பௌத்தம் தழுவி இந்து மதத்தை ஆட்டம் காண வைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். அவரளவுக்கு, இந்து மதத்தின் மீது தாக்குதல் தொடுத்தவர் யார்? கடவுள் அவதாரங்களைத் தோலுரித்துவர் யார்? அப்படிபட்ட அம்பேத்கர் உங்களுக்கு எதிரியா இல்லையா?' என்று அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கியுள்ளார். 

.