This Article is From Sep 16, 2018

தெலுங்கானா: கர்ப்பிணி மனைவியின் கண் முன் கணவன் வெட்டிக் கொலை

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தனர், அப்போது அவர்களுக்கு பின்னால் அரிவாளுடன் வந்த மர்ம நபர் ப்ரனய் கழுத்தில் வெட்டினார்

கர்ப்பிணி மனைவியின் கண் முன் கணவன் வெட்டிக் கொலை - சிசி டிவி வீடியோ

Hyderabad:

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடா பகுதியை சேர்ந்த பாலசாமி- பிரேமலதா தம்பதியின் மகன் ப்ரனய் பெருமல்லா. இவரும் அப்பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் மாருதிராவ் மகள் அம்ருதாவும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்

ப்ரனய் பெருமல்லா தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்பதால், இந்த காதல் திருமணத்திற்கு அம்ருதா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது, அம்ருதா மூன்று மாதம் கர்பமாக உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அவரை மருத்துவ பரிசோதனைக்காக ப்ரனய் மருத்துவனமைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் அரிவாளுடன் வந்த மர்ம நபர் ப்ரனய் கழுத்தில் வெட்டினார். அவர் கீழே விழுந்ததும் மீண்டும் கழுத்தில் வெட்டி விட்டு ஓடினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்ருதா, கதறியபடி உதவிக்காக மருத்துவமனைக்குள் ஓடும் காட்சிகள் சிசி டிவியில் பதிவாகியுள்ளன. ப்ரனய்யை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அம்ருதாவை தாழ்ந்த ஜாதியை சேர்ந்த பிரனய் திருமணம் செய்ததால் அவரை கூலிப்படையை ஏவி தந்தை மாருதிராவ் கொலை செய்து இருக்க கூடும் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், அம்ருதாவின் தந்தை மாருதிராவ், அவரது தம்பி ஷ்ரவன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

.