This Article is From Feb 11, 2019

பட்ஜெட் மீதான விவாதம்: இன்று கூடுகிறது தமிழக சட்டசபை

2019-20-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த 8-ம்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் மீதான விவாதம்: இன்று கூடுகிறது தமிழக சட்டசபை

பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

ஹைலைட்ஸ்

  • பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று விவாதம் நடைபெறும்
  • இன்று தொடங்கி 3 நாட்களுக்கு விவாதம் நடைபெறுகிறது
  • இறுதியாக விவாதத்திற்கு நிதியமைச்சர் பன்னீர் செல்வம் பதில் அளிப்பார்

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இதில் 2019-20-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. 

மத்திய பட்ஜெட் கடந்த 1-ம்தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு பதிலாக பியூஷ கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

இதில் முக்கிய அம்சமாக 5 லட்சம் வரைக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சலுகைகள் கிடைக்கும் என்கிற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் 2019-20- கடந்த 8-ம்தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் இதனை தாக்கல் செய்தார். 

தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், 2 ஆயிரம் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின. இந்த நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இன்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரையிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். 

இந்த விவாதத்திற்கு பின்னர் கூட்டத்தொடரின் கடைசியாக 14-ம்தேதி சட்டசபை கூடும். அன்றைய தினம் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட் விவாதங்களுக்கு பதில் அளித்து பேச இருக்கிறார். 

இன்றைய கூட்டத்தொடரின் போது தமிழக அரசின் கடன் சுமை குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வியை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்னும் 3 நாட்களுக்கு தமிழக சட்ட சபையில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 
 

.