This Article is From Aug 21, 2019

பதுக்கியவர்கள்.. சுருட்டியவர்கள்.. தேடப்படுகிறார்கள்! ப.சிதம்பரம் குறித்து தமிழிசை நக்கல்!

மடியில் கணம் இல்லையென்றால் வழியில் பயமில்லை. சட்டம் படித்தவரே சட்டத்திற்கு பயந்து ஓடி ஒளிவது ஏன்?

பதுக்கியவர்கள்.. சுருட்டியவர்கள்.. தேடப்படுகிறார்கள்! ப.சிதம்பரம் குறித்து தமிழிசை நக்கல்!

பதுக்கியவர்கள்,, சுருட்டியவர்கள்.. தேடப்படுகிறார்கள் - தமிழிசை

பதுக்கியவர்கள்.. சுருட்டியவர்கள்.. தேடப்படுகிறார்கள் என ப.சிதம்பரம் சிபஐ-யால் தேடப்படுவது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நக்கலாக ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த  வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கபில் சிபில் தலைமையிலான ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் குழு, உச்சநீதிமன்றத்தல் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. 

இதனிடையே, டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் நேற்று மாலை சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென நுழைந்தனர். அப்போது, அவர் வீட்டில் இல்லாததால் திரும்பினர்.

இதைத்தொடர்ந்து, மீண்டும் நேற்று இரவு நான்கு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ப.சிதம்பரம் வீட்டில் இல்லாத நிலையில் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். 

அந்த நோட்டீசில் ப.சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரத்திற்கு அந்த நோட்டீஸின் நகலை மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைத்தது பரபரப்பை
ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இன்று காலை ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்றும், அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால் உடனடியாக விசாரிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதனிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்ஜாமீன் கிடைக்காததால் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து அமலாக்கத்துறை நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. 2-வது நாளாக ப.சிதம்பரம் இருக்கும் இடம் தெரியாததால் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார் தனது ட்வீட்டர் பதவில், முன்னாள் நிதி அமைச்சரை கைது செய்தால், பொருளாதார மந்தநிலை சரியாகிவிடுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பதில் சொல்லுங்க அக்கா என்று தமிழிசை சவுந்தரராஜனை டேக் செய்து கேள்வி எழுப்பினார். 

இதற்கு தடாலடியாக பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், வங்கியில் போடுவதாக சொல்லாத கருப்பு பணம் 15 லட்சம் எங்கே? எங்கே என்று வாழைப்பழ காமெடி கதை போல் கேள்வி கேட்ட அரசியல் காமெடியர்களுக்கு பதில் தரவேண்டி பதுக்கியவர்கள்,, சுருட்டியவர்கள்.. தேடப்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 

இதனிடயை, என்ன தவறு செய்தார் ப.சிதம்பரம் என்று கேள்வி எழுப்பிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு பதிலளிக்கும் விதமாக, மடியில் கணம் இல்லையென்றால் வழியில் பயமில்லை. சட்டம் படித்தவரே சட்டத்திற்கு பயந்து ஓடி ஒளிவது ஏன்? சிதம்பர ரகசியங்கள் அழகிரிக்கு தெரியாதா என்ன? என்று தமிழிசை கேள்வி எழுப்பியிருந்தார்.

.