நாளை சோனியா காந்திக்கு 73 வது பிறந்த நாள்.
New Delhi: நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், அதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பிறந்த நாளை கொண்டாட மாட்டார் என்று கடசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாளை சோனியா காந்திக்கு 73-வது பிறந்த நாள் ஆகும்.
பல்வேறு இடங்களில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் தாக்குதல்கள் சோனியாவுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்திருப்பதாகவும், இதன் காரணமாக அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்க விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உன்னாவோவில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண், நீதிமன்றத்திற்கு செல்லும் போது 5 பேர் கொண்ட கும்பலால் தீயிட்டு கொளுத்தப்பட்டார். 90 சதவீத காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அதிகாரிகள் டெல்லியில் சப்தார்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக் கிழமை காலை அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தை கண்டித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
உன்னாவோ சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று அரசு உறுதி அளித்துள்ளது.
இதற்கிடையே, ஐதராபாத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம் கால்நடை பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
உலகில் பாலியல் பலாத்காரத்திற்கு தலைநகரம் இந்தியா என்று காங்கிரசின் ராகுல் காந்தி விமர்சித்து பேசியுள்ளார்.