ஹைலைட்ஸ்
- கமல், ரஜினி ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்
- 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்
- இவரது கடைசி படம் 'மாம்'
New Delhi: திரையுலகில் ராணியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி என்றால் அது மிகையாகாது. உலக அளவில் தன் நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தவர் ஸ்ரீதேவி. அப்படிப்பட்ட ஸ்ரீதேவி யாரும் எதிர்பார்க்காத விதமாக சென்ற ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
ஸ்ரீதேவி இறந்து ஒரு வருடம் நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. சிவகாசியில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி பிறந்தார் ஸ்ரீதேவி. தனது நான்கு வயதில் கந்தன் கருணை என்னும் தமிழ் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய ‘மூன்று முடிச்சு' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. கமல், ரஜினி என இரு ஜாம்பவன்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தார் ஸ்ரீதேவி.
‘16 வயதினிலே' படத்தின் மயிலை யாரால் மறக்க முடியும். ரஜினியுடன் பல கமர்ஷியல் படங்களில் நடித்து லேடி சூப்பர்ஸ்டார் நான் தான் என நிரூப்பித்தவர் ஸ்ரீதேவி.
‘மூன்றாம் பிறை' படத்தில் கமலின் நடிப்பிற்கு இணையாக நடித்திருப்பார் ஸ்ரீதேவி. அந்த படத்திற்கு ஸ்ரீதேவிக்கு எப்படி தேசிய விருது கிடைக்காமல் போனது என்பது இன்றும் புரியாத புதிர் தான்.
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாட்டையோ அந்த பாட்டு இடம் பெற்ற ‘வறுமையின் நிறம் சிவப்பு' படத்தையோ யாரால் மறக்க முடியும். ‘சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் கமலின் காதலியாகவும் ‘ப்ரியா' படத்தில் நடிகையாகவும் நடிப்பில் பட்டையை கிளப்பிருப்பார்.
‘மீண்டும் கோகிலா', ‘ஜானி' படங்களில் தன் முத்திரையை பலமாக பதித்திருப்பார் ஸ்ரீதேவி. 1986 ஆம் ஆண்டு ‘நான் அடிமை இல்லை' என்னும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பர் ஸ்ரீதேவி. அதன் பின் அவர் தமிழில் நடித்த படம் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘புலி' படத்தில் தான்.
தமிழை தவிர மலையாளத்தில் 25 படங்கள், தெலுங்குவில் 90 படங்கள், கன்னடத்தில் 6 படங்கள் என தென்னிந்தியாவை கலக்கிய ஸ்ரீதேவி, ஹிந்தி படவுலகிலும் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்தார்.
மூன்றாம் பிறை படத்தின் ஹிந்தி ரி-மேக்கான ‘சாத்மா' படம் தான் இன்றும் நடிப்பின் இலக்கணமாக கருதப்படுகிறது. மிஸ்டர்.இந்தியா, ஹிம்மத்வாலா, என பல ப்ளாக்பஸ்டர் படங்களில் நடித்தார் ஸ்ரீதேவி.
ஹிந்தி படவுலக தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்த ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஸ்சி கபூர் என இரு மகள்கள் உண்டு,
மண்ணுலகை விட்டு ஸ்ரீதேவி சென்றிருந்தாலும் நடிப்பு கலை இருக்கும் வரை ஸ்ரீதேவியின் புகழும் நிலைத்து இருக்கும்.