This Article is From Jan 12, 2019

10% இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்!

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்

10% இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்!
New Delhi:

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இட ஒதுக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கு மிகக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, சில எதிர்கட்சிகளுடன் துணையுடன் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

10 சதவிகித இடஒதுக்கீட்டு மசோதாவுக்கான வாக்கெடுப்பில் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்புவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த மசோதா தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன்மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. 149 உறுப்பினர்களின் ஆதரவுடன் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு அதிமுக, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற இரு அவைகனிலும் மசோதா நிறைவேறிய நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இன்று 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

.