This Article is From Jun 17, 2019

எம்.பி-யாக லோக்சபாவில் பதவியேற்ற பிரதமர்… ‘மோடி, மோடி’ என கோஷம்! #Video

ஸ்மிருதி இரானி, உறுதிமொழி சொல்லி பொறுப்பேற்கும்போது, பலத்த கரகோஷம் எழுப்பப்பட்டது

இந்தக் கூட்டத் தொடரின் போது பல முக்கிய மசோதக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

17வது லோக்சபாவின் நாடாளுமன்ற உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற போது, அவையில் ‘மோடி… மோடி…' என கோஷம் எழுப்பப்பட்டது. 

நாடாளுமன்றத்தின் கீழவையில் பிரதமர் மோடி இன்று உறுதிமொழி சொல்லி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், “நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்னும் நான் லோக்சபாவின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்த பொறுப்பில் இருக்கும் நான் அரசியல் சட்ட சாசனத்தின்படி எனது கடமைகளைச் செய்வேன்' என்று கூறினார். அப்போது பாஜக எம்.பி-க்கள், ‘மோடி… மோடி…' என்று கோஷமிட்டனர். 

நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, லோக்சபாவின் முதல் கூட்டம் இன்று ஆரம்பித்துள்ளது. இந்தக் கூட்டத் தொடரின் போது பல முக்கிய மசோதக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக முத்தலாக் நடைமுறையைக் குற்றமாகக் கருதும் மசோதா தாக்கல் செய்யப்படலாம். 

மோடியைத் தவிர உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்டத் துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் மற்றும் ஜவுளித் துறை மற்றும் குழந்தைகள், பெண்கள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

ஸ்மிருதி இரானி, உறுதிமொழி சொல்லி பொறுப்பேற்கும்போது, பலத்த கரகோஷம் எழுப்பப்பட்டது. குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர், தங்களின் மேசைகளைத் தட்டி ஸ்மிருதி இரானியை உற்சாகப்படுத்தினர். 

அமைச்சர் ஸ்மிருதி இரானி, பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை வணங்கி வரவேற்றார். சோனியாவும், ஸ்மிருதிக்கு வணக்கம் வைத்தார். இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில், அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக நின்று வெற்றிபெற்றார் ஸ்மிருதி இரானி. ராகுல் காந்தி, இன்று லோக்சபாவிற்கு வரவில்லை. 

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடருக்கு முன்னர் பேசிய பிரதமர் மோடி, “எதிர்க்கட்சிகள், தங்களிடம் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்கள் தீர்க்கமாக தொடர்ந்து பேச வேண்டும். அப்படி அவர்கள் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்” என்று கூறினார்.

.