This Article is From Jan 19, 2019

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மம்தா நடத்தும் பாஜக எதிர்ப்பு மாநாடு - 10 Points

மம்தா பானர்ஜி நடத்தும் மாநாட்டில் சுமார் 40 லட்சம்பேர் கலந்து கொள்வார்கள் என்று அக்கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டிற்காக தயாராகும் மேடையை படத்தில் காணலாம்

ஹைலைட்ஸ்

  • கொல்கத்தாவில் பாஜக எதிர்ப்பு மாநாடு நடத்துகிறார் மம்தா
  • திமுக தலைவர் ஸ்டாலின் மாநாட்டில் பங்கேற்கிறார்
  • 40 லட்சம்பேர் வருவார்கள் என்று திரிணாமூல் காங். எதிர்பார்ப்பு
Kolkata:

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், சரத்பவார் உள்ளிட்ட 25 முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஒன்றுபட்ட இந்தியா என்ற தலைப்பு இந்த மாநாட்டிற்கு சூட்டப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளை திரட்டும் முயற்சியில் மம்தா ஈடுபட்டுள்ளார். 

மாநாடு தொடர்பான 10 முக்கிய தகவல்கள்

1. இன்று காலையில் ட்விட்டர் பதிவு செய்த மம்தா பானர்ஜி, ''வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு தொடங்குவதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆதரவால் இன்றைய மாநாடு வலிமையான, வளர்ச்சி மிகுந்த ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கும்'' என்று கூறியுள்ளார். 

2. மம்தாவின் மாநாட்டிற்கு ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மம்தாவுக்கு கடிதம் அனுப்பியுள்ள ராகுல் காந்தி, தனது தரப்பில் இருந்து மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, அபிஷேக் மனு சிங்வி ஆகியோரை மாநாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். 

3. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

4. போலீசார் அளித்த தகவலின்படி மாநாடு நடைபெறும் பிரிகேட் மைதானத்தில் 7 லட்சம்பேர் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால் 40 லட்சம் பேர் வருவார்கள் என்று திரிணாமூல் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

5. மாநாட்டிற்காக கடந்த சில வாரங்களாக திரிணாமூல் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மாநாட்டிற்காக 20 பிரமாண்டமான எல்.இ.டி. டி.விக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

6. பாதுகாப்பை பொறுத்தளவில் மாநாடு நடைபெறும் பகுதி 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரம் திரிணாமூல் கட்சி தொண்டர்களும் போலீசாருக்கு உதவியாக களத்தில் உள்ளனர்.

7. மோடிக்கு எதிராக இந்த மாநாட்டை மம்தா நடத்துகிறார். அவரை எதிர்க்கும் வலிமை மிக்க தலைவராக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள மம்தா இதுபோன்று செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

8. மாநில கட்சிகள் பலவற்றுடன் மம்தா பானர்ஜி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். 

9. பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று அறிவிக்கவில்லை என காங்கிரஸ் கட்சி திரும்பத் திரும்ப கூறி வருகிறது. அடுத்து பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு. 

10. மாநாட்டை விமர்சித்துள்ள பாஜக, ''அரசியலில் ஓய்வு பெற்றவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுகின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளது.

.