அமிர்தரசஸ் தொகுதியில் போட்டியிடுமாறு மன்மோகன் சிங் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளார்.
Chandigarh: மக்களவை தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 86 வயதான மன்மோகன் அசாம் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 1991-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் ஜூன் 14-ம்தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் அவரை அமிர்தசரஸ் தொகுதியில் இருந்து போட்டியிட வைக்கலாம் என்று காங்கிரஸ் தரப்பில் முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதில் அவருக்கு விருப்பம் ஏதும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில், மன்மோகன் சிங்கை சந்தித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் நலம் விசாரித்தார். அப்போது, பஞ்சாபில் போட்டியிடுவது குறித்து மன்மோகனிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதில் தனக்கு விருப்பம் இல்லை என்று மன்மோகன் அமரிந்தரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இன்று பேட்டியளித்த அமரிந்தர் சிங், மன்மோகன் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று தெரிவித்துள்ளார். இதுவரை மன்மோகன் மாநிலங்களவை உறுப்பினராக மட்டுமே இருந்து வருகிறார்.
பஞ்சாபில் மொத்தம் 13 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு வரும் மே 19-ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. முடிவுகள் 23-ம் தேதி அறிவிக்கப்படுகின்றன.